• Thu. Mar 28th, 2024

குரானை அவமதித்ததாக இளைஞர் கல்லால் அடித்து படுகொலை

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள கானேவால் மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் குரானை அவமதித்ததாகக் கூறி நடுத்தர வயது நபர் ஒருவரை பொது மக்கள் கல்லெறிந்து கொன்றனர்.
மக்ரிப் தொழுகைக்குப் பிறகு ஜங்கிள் தேரா கிராமத்தில் ஒரு நபர் குர்ஆனின் சில பக்கங்களை கிழித்து தீ வைத்ததாக செய்திகள் வந்ததையடுத்து நூற்றுக்கணக்கான உள்ளூர்வாசிகள் அங்கு திரண்டனர்.

குரானின் பக்கங்களை எரித்ததாக கூறி, நடுத்தர வயது நபரை சுற்று வளைத்து, கல் எறிந்து படு கொலை செய்ததோடு, அவரின் சடலத்தை மரத்தில் தொங்கவிட்டனர். அந்த நபர் தான் நிரபராதி எனவும், தான் குரானை எரிக்கவில்லை என தொடர்ந்து கதறிய போதும் யாரும் அவருக்கு செவிசாய்க்கவில்லை.

கல்லெறி சம்பவம் நடப்பதற்கு முன்னர் காவல் துறை குழுவொன்று அங்கு வந்திருந்ததாக நேரில் பார்த்தவர்கள் கூறியுள்ளனர். அவர்கள் குற்றவாளியைப் பிடித்தனர். ஆனால், கூடியிருந்த கூட்டம், குற்றம் சாட்டப்பட்ட நபரை காவல் துறையினரிடம் இருந்து அவரை விடுவித்து, இழுத்து சென்றதாகவும் நேரில் பார்த்தவர்கள் கூறினர்.
பாகிஸ்தானில் கும்பல் படுகொலை நடப்பது இது முதல் சம்பவம் அல்ல. முன்னதாக டிசம்பரில், வெறித்தனமான கும்பல் ஒன்று, இலங்கையை சேர்ந்த ஒருவரை சித்திரவதை செய்து கொன்றுவிட்டு, அவரது உடலை பொதுவெளியில் எரித்துள்ளது.

சியால் கோட்டில் உள்ள வசிராபாத் சாலையில், தனியார் தொழிற்சாலைகளின் தொழிலாளர்கள், தொழிற்சாலையின் ஏற்றுமதி மேலாளரான இலங்கையை சேர்ந்த நபரை தாக்கி, அவரைக் கொன்ற பின்னர் அவரது உடலை பொதுவில் எரித்த சமப்வம் உலகத்தில் பரபரப்பாக பேசப்பட்டது.

“மத நிந்தனை” சம்பவத்தால் ஆத்திரமடைந்த நூற்றுக்கணக்கான ஆண்கள், தொழிற்சாலைக்கு வெளியே திரண்டனர். அவர்களில் பெரும்பாலோர் TLP அமைப்பின் செயற்பாட்டாளர்கள் மற்றும் ஆதரவாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

“கும்பல் குற்றம் சாட்டப்பட்ட நபரை (இலங்கையை சேர்ந்த நபர்) தொழிற்சாலையிலிருந்து வெளியே இழுத்துச் சென்று கடுமையாக சித்திரவதை செய்து கொலை செய்தது. போலீசார் அங்கு செல்வதற்குள் கும்பல் அவரது உடலை எரித்தது,” என்று காவல் துறை அதிகாரி கூறினார்.

ஆராய்ச்சி மற்றும் பாதுகாப்பு ஆய்வுகளுக்கான மையம் அளித்துள்ள புள்ளிவிவரங்களில், பாகிஸ்தானில் 1947 முதல் நாட்டில் மொத்தம் 1,415 தெய்வ நிந்தனை வழக்குகள் பதிவாகியுள்ளதாக கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *