உடுப்பி மாவட்டத்தில் உள்ள அனைத்து உயர்நிலை பள்ளிகளையும் சுற்றியுள்ள பகுதிகளில் நாளை முதல் வரும் 19ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலம்,உடுப்பிஅரசு மகளிர் கல்லூரியில் கடந்த டிசம்பர் மாதம் ஹிஜாப் அணிந்து வந்த 6 முஸ்லிம் மாணவிகளுக்கு வகுப்பறையில் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது. இதனால், கல்லூரி நிர்வாகத்திற்குக் கண்டனம் தெரிவித்து 6 மாணவிகளும் ஹிஜாப் அணிந்து தர்ணாவில் ஈடுபட்டனர். ஹிஜாப் போராட்டத்துக்கு எதிராக, சில மாணவர்கள் காவி துண்டு அணியும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால், உயர்நிலை பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பதற்றம் நிலவியதால், கர்நாடகாவில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு 3 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்படவுள்ளதால் உடுப்பி மாவட்டத்தில் உள்ள அனைத்து உயர்நிலைப் பள்ளிகளையும் சுற்றியுள்ள பகுதிகளில் நாளை முதல் வரும் 19ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு கர்நாடக அரசால் பிறப்பிக்கப்பட்டுள்ளது. உயர்நிலைப் பள்ளிகளைச் சுற்றியுள்ள பகுதிகளில் அனைத்துக் கூட்டங்கள் மற்றும் போராட்டங்கள் நடத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளன.