நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் தொடர்ந்து சட்டவிரோதமாக நிகழ்ந்து வரும் கஞ்சா மற்றும் மது விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞருக்கு அடி உதை.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் காந்தியடிகள் வீதியை சேர்ந்தவர் ராஜா. காவிரி ஆற்றுக்குச் சென்றபோது அங்கு சில இளைஞர்கள் மதுபானம் மற்றும் கஞ்சாவை சட்டவிரோதமாக விற்பனை செய்வதைக் கண்டு, அவர்களிடம் இதையெல்லாம் விற்க கூடாது என அறிவுரை செய்துள்ளார்.இதனால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர்கள் ராஜாவை சரமாரியாக தாக்கிவிட்டு, தப்பியுள்ளனர்.
சட்டவிரோத செயலை தட்டிக்கேட்ட இளைஞர் மீது தாக்குதல் நடைபெற்ற சம்பவத்தைக் கண்டித்து பொதுமக்கள் குமாரபாளையம் – எடப்பாடி சாலையில் 50க்கும் மேற்பட்ட பெண்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த குமாரபாளையம் போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்தனர். அப்போது குமாரபாளையம் பகுதியில் அண்மைக் காலமாக சட்டவிரோதமாக கஞ்சா,மது,லாட்டரி விற்பனை நிகழ்ந்து வருவதாக குற்றச்சாட்டினர்.நடவடிக்கை எடுக்க பலமுறை போலீசாரிடம் தெரிவித்தும் கண்டுக்கொள்ளவில்லை என புகார் தெரிவித்தனர்.இதன்பின்னர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதியளித்தையடுத்து பொதுமக்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டனர்.