ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தில், பயோ மெட்ரிக் அங்கீகாரத்துடனான ஆதார் எண்ணை பயன்படுத்தி, நாட்டில் உள்ள எந்த நியாயவிலைக் கடைகளிலும் பொருட்கள் வாங்க முடியும் என்று, மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற மக்களவையில் உறுப்பினர்களின் கேள்விக்கு மத்திய நுகர்வோர் விவகாரம், உணவு மற்றும் பொது விநியோகத்துறை இணை அமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி, எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் கூறியுள்ளதாவது:
“ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை திட்டத்தால் புலம் பெயர்ந்தவர்கள் உட்பட அனைத்து பயனாளர்களும் தங்களுக்கான மாதாந்திர உணவு தானியங்களை, நாட்டில் உள்ள எந்த நியாயவிலைக் கடைகளிலும் ரேஷன் அட்டையை பயன்படுத்தி வாங்க முடியும். மேலும், பயோ மெட்ரிக் அங்கீகாரத்துடனான ஆதார் எண்ணை பயன்படுத்தியும் உணவு தானியங்களை பெற முடியும்.
ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை திட்டத்தின் கீழ் தற்போது மாதந்தோறும் சராசரியாக 3.5 கோடி பரிவர்த்தனைகள் நடைபெற்று வருகின்றன. இந்தத் திட்டத்தின் கீழ் தமிழகத்திற்கு 5076284.98 மெட்ரிக் டன் அளவிற்கு உணவு தானியங்கள் ஒதுக்கப் பட்டுள்ளது. அதில் 4087528.24 மெட்ரிக் டன் அளவிலான உணவு தானியங்களை தமிழக அரசு விநியோகித்துள்ளது” என்று தெரிவித்துள்ளார்.