உலக மீனவர் தினம் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 21ஆம் தேதி மிகக் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாட்களில் மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க செல்லாமல் சிறப்பு வழிபாடுகள், கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பது வழக்கம். இதனால் கடற்கரை கிராமங்கள் இந்த நாளில் களை கட்டியிருக்கும்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரை 44 கடற்கரை கிராமங்களிலும் உலக மீனவர் தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் நாகர்கோவிலை அடுத்த பள்ளம் துறை கடற்கரை கிராமத்தில் தேவாலயத்தில் சிறப்பு வழிபாடுகளுக்கு பின்னர், மந்திரிக்கப்பட்ட புனித நீரை கொண்டு வந்து அருள் பணியாளர் மற்றும் மீனவர்கள் கடலுக்கும் படகுகளுக்கும் புனிதநீர் தெளித்து பூஜைகள் செய்து கேக்கு வெட்டி அனைவருக்கும் பகிர்ந்து கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். இந்த நாளில் மாவட்டம் முழுவதும் உள்ள மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க செல்லாமல் உலக மீனவர் தினத்தை கோலாகலமாகக் கொண்டாடி வருகின்றனர். அதேவேளையில் மீன்வளத்தை மீனவர்களிடம் இருந்து பறிக்கும் மீன்வள மசோதா 2021 முறியடிப்போம் என்ற வாசகத்தோடு அதை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையோடு இந்த தினத்தை கொண்டாடி வருகின்றனர்.
