• Fri. May 3rd, 2024

காயத்துக்கு போட்ட ஊசியால் பெண் பலி..!

Byவிஷா

Dec 15, 2023

திருவண்ணாமலை அருகே பெண் ஒருவர் காலில் உள்ள காயம் ஆறுவதற்கு மருந்துக்கடையில் ஊசி போட்டதால் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம், துரிஞ்சாபுரம் கிராமத்தில் வசித்து வருபவர் இந்திராணி. இவருக்கு வயது 47. இவர், திருவண்ணாமலையில் ஒரு ஹோட்டலில், பாத்திரம் கழுவும் வேலை செய்து வருகிறார். இவர் ஹோட்டலில் பணி செய்து கொண்டிருந்தபோது காலில் அடிபட்டு காயம் ஏற்பட்டது. திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற இந்திராணி காயத்திற்கு கட்டுப் போட்டுக்கொண்டு மீண்டும் பணிக்கு வந்துவிட்டார். இந்நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன் மீண்டும் அதே இடத்தில் வலி அதிகரித்தது.
வலி தாங்கமுடியாத இந்திராணி ஊசாம்பாடி அடுத்த புது மல்லவாடி கிராமத்தில் உள்ள சரவணா மெடிக்கல் ஷாப்பிற்கு கால் வலிக்கு மருந்து வாங்கச் சென்றார். அங்கிருந்த கடை உரிமையாளர் சரவணன், இந்திராணி காயத்துக்கு போட்டிருந்த கட்டை அவிழ்த்துப் பார்த்தார். காயம் சரியாக ஆறாமல் இருந்ததால் வலி அதிகமாக உள்ளது. இதற்கு ஒரு ஊசி போட்டால் தான் சரியாகும் எனக் கூறியுள்ளார். இந்திராணியும் ஒத்துக் கொண்டு ஊசி போட்டுக் கொண்டார். ஆனால், ஊசி போட்ட சற்று நேரத்திலேயே, இந்திராணி மயங்கி விழுந்து விட்டார். அக்கம்பக்கத்தினர் இதை பார்த்துவிட்டு உடனடியாக இந்திராணியை திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால், மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே இந்திராணி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இத்தகவல் அறிந்ததும் மருந்துகடைக்காரர் தலைமறைவாகி விட்டார். போலீசார் தனிப்படை அமைத்து தலைமறைவாக உள்ள மருந்துக் கடை உரிமையாளர் சரவணனை தேடி வருகின்றனர். அத்துடன் அவரது மருந்துக் கடைக்கும் சீல் வைக்கப்பட்டது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *