தமிழ் திரையுலகில் பிரம்மாண்ட படைப்பாக பார்க்கப்படும் ’பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தை இயக்குநர் மணிரத்னம், லைகா புரொடக்ஷனுடன் இணைந்து தயாரித்து இயக்கியுள்ளார். மிகப்பெரும் பொருட்ச்செலவில் இரண்டு பாகங்களாக உருவாகியிருக்கும் இந்தப் திரைப்படம் விரைவில் ரிலீஸாக இருக்கிறது. ஐஸ்வர்யா ராய், விக்ரம், நடிகர் கார்த்தி, ஜெயம் ரவி, திரிஷா உள்ளிட்ட மிகப்பெரும் நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்திருக்கின்றனர்.
இந்திய சினிமாவே எதிர்பார்க்கும் படைப்பாக இருக்கும் பொன்னியின் செல்வன் ரிலீஸாக இருக்கும் நிலையில், தன்னுடைய கனவு திரைப்படமான ‘மகாபாரதம்’ படத்தின் அப்டேட்டை வெளியிட்டுள்ளார் இயக்குநர் ராஜமௌலி. இந்தியாவின் ஸ்டார் இயக்குநராகவும், பிரம்மாண்டத்தை கட்டியெழுப்புபவராக இருக்கும் ராஜமௌலி, ஆர்ஆர்ஆர் திரைப்படம் மூலம் புதிய உட்சத்துக்கு சென்றுள்ளார். அவரது இயக்கத்தில் ஏற்கனவே வெளியான பாகுபலி மற்றும் பாகுபலி 2 திரைப்படங்கள் ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்து, இந்திய சினிமாவின் அடையாளமாக மாறியிருக்கும் நிலையில், அடுத்ததாக அப்படியான பிரம்மாண்ட படைப்பை உருவாக்கவும் திட்டமிட்டுள்ளார்.
அவரது கனவு திரைப்படம் என்றால் ‘மகாபாரதம்’ தான். இதனை பலமுறை தன்னுடைய பேட்டிகளில் தெரிவித்துள்ளார். தற்போது கைவசம் 3, 4 படங்கள் இருப்பதால், அந்தப் படங்களின் சூட்டிங்கை முடித்துவிட்டு ‘மகாபாரதம்’ படத்திற்கான பணிகளை தொடங்க இருப்பதாக கூறியுள்ளார். இந்தியளவில் மிகப்பெரிய பட்ஜெட்டில், மிகப்பிரம்மாண்ட படைப்பாக அந்தப் படத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளார். இதுவரை எடுக்கப்பட்ட படங்களை விட புதிய பிரம்மாண்டத்தின் உட்சமாக மகாபாரதத்தை எடுக்க வேண்டும் என்ற முடிவில் இருக்கிறார்.
இதுகுறித்து பேட்டி ஒன்றில் பேசும்போது, “மகாபாரதம் படம் என்னுடைய கனவு திரைப்படம். அதனை கைவிட வில்லை. மகாபாரதம் படத்தை உருவாக்க அதிக நேரம் மற்றும் நீண்ட நாட்கள் பணியாற்ற வேண்டியிருக்கும். அதற்கான தயாரிப்புகளும் மிக மிக பெரியது. இப்போது கைவசம் 4 படங்கள் இருக்கின்றன. அந்தப் பணிகளை முடித்தவுடன் நிச்சயம் மகாபாரதம் படத்தை எடுப்பேன்” எனத் தெரிவித்துள்ளார். தமிழில் பொன்னியின் செல்வன் வர இருக்கும் நிலையில் ராஜமௌலி மகாபாரதம் அப்டேட் கொடுத்தது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.