மாண்டஸ் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கப்படும் தகவல் குறித்து அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
வங்கக் கடலில் உருவான மாண்டஸ் புயல் நள்ளிரவு 2.30 மணியளவில் மாமல்லபுரம் அருகே கரையை கடந்தது. இதன்போது, 70 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசியது. இதன் காரணமாக பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன. கடலோர பகுதிகளில் உள்ள குடியிருப்புகள் மற்றும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுகள் சேதமடைந்துள்ளது.
இந்நிலையில், தமிழக பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், சென்னையில் இன்று காலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “தமிழகத்தில் மாண்டஸ் புயலால் பெரிய பாதிப்பு இல்லை. இருப்பினும், மீட்புக்குழுவினர் தயார் நிலையில் உள்ளனர். புயலால் 4 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வந்துள்ளது. மழை பாதிப்பு, சேதம் குறித்து கணக்கெடுக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இன்று பிற்பகலுக்குள் புயல் பாதிப்பு குறித்த கணக்கெடுப்புப் பணிகள் முடிவடைந்துவிடும். புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்னும் ஓரிரு நாட்களில் நிவாரணம் வழங்கப்படும்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாலே பாதிப்பு குறைந்துள்ளது. பொதுப்பணித்துறை மற்றும் மாநகராட்சியினர் மரங்கள் அகற்றும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று மாலைக்குள் முழுவதுமாக இயல்பு நிலைக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என்று தெரிவித்தார்.