குழந்தைகள் பாலியல் வன்கொடுமை தடுக்க வலியுறுத்தி இந்தியா முழுவதும் கேரள வாலிபர் சைக்கிள் பயணம் மேற்கொண்டு உள்ளார் மதுரை வந்த அவருக்கு காந்தி மியூசிய வளாகத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
கேரள மாநிலம் திருச்சூர் பகுதியை சேர்ந்தவர் அசன் ஜாகீர் வயது 23. மங்களூர் சீனிவாசா கல்லூரியில் இன்டீரியர் டிசைனிங் பி. எஸ். சி பட்டப் படிப்பு முடித்துள்ளார்.இவரது தந்தையார் பெயிண்ட் வேலை பார்ப்பவர் சிறிய வயதிலேயே சேவை நோக்கத்தில் செயல்பட்ட அசன் ஜாகீர் குழந்தைகள் பாலியல் வன்கொடுமைகளால் இந்தியா முழுவதும் பாதிக்கப்படுவதை அறிந்து இதை தடுக்க வலியுறுத்தி கடந்த வாரம் திருச்சூரில் இருந்து சைக்கிள் பயணம் மேற்கொண்டார் . கேரளா திருச்சூரில் இருந்து புறப்பட்டு எர்ணாகுளம் ஆலப்புழா கொல்லம் திருவனந்தபுரம் கன்னியாகுமரி திருச்செந்தூர் திருநெல்வேலி தென்காசி தேனி வழியாக மதுரை காந்தி மியூசியம் வந்தார். அவருக்கு மதுரை காந்தி மியூசியம் வளாகத்தில் மதுரை பாரதி யுவகேந்திரா மற்றும் காந்தி மியூசியம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது .
காந்தி மியூசியம் செயலாளர் நந்தாராவ் காந்தியின் சிந்தனைகள் அடங்கிய மலையாள மொழியில் உள்ள புத்தகத்தை வழங்கினார். பாரதி யுவகேந்திரா நிறுவனர் நெல்லை பாலு மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார் . சைக்கிள் பயணம் மேற்கொண்டுள்ள அசன் ஜாகீர் கூறுகையில் குழந்தைகள் சின்ன வயதிலேயே பாலியல் வன்கொடுமைக்கு ஆளாவதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதற்காகவே இந்த பயணத்தை மேற்கொண்டு இருக்கிறேன். நான் நன்றாக படங்களை வரைபவன் என்பதால் தினந்தோறும் ஏதாவது ஒரு படத்தை வரைந்து அதை விற்று அதன் மூலம் வரும் வருமானத்தில் என் உணவுக்கான தொகையினை செலவழிக்கிறேன் என்றார். மதுரையிலிருந்து புறப்பட்டு ராமேஸ்வரம் வழியாக தமிழக முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார். அதன் பிறகு கர்நாடக மாநிலம் செல்கிறார் நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை பாரதி யுவகேந்திரா நிறுவனர் நெல்லை பாலு செய்திருந்தார்…