கடந்த ஆட்சியாளர்களின் தவறால் நாம் கடனாளியாகிவிட்டோம். விரைவில் நிதி சுமையினை சமாளித்து 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்திற்கு கூடுதல் சம்பளமும், கூடுதல் வேலை நாட்களும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இளையான்குடியில் முன்னாள் அமைச்சர் தமிழரசி ரவிக்குமார் எம்எல்ஏ தகவல் அளித்தார்.
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே உள்ள தடியமங்கலத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்ட சமூக தணிக்கை கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சரும், மானாமதுரை சட்டமன்ற உறுப்பினருமான தமிழரசி ரவிக்குமார் திடீர் ஆய்வு மேற்கொண்டு, பெண்களிடம் பணிகள் குறித்து கேட்டறிந்தார்.
அப்போது பேசுகையில், இந்தியாவிலேயே தமிழகத்தில் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டம் சிறப்பாக செயல்படுவதாகவும், கடந்த ஆட்சியாளர்களின் தவறால் நாம் கடனாளியாகிவிட்டோம். விரைவில் நிதி சுமையினை சமாளித்து 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்திற்கு கூடுதல் சம்பளமும், கூடுதல் வேலை நாட்களும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார். மேலும் கிராம வளர்ச்சியில் 100 நாள் வேலைத்திட்டத்தின் பங்கு முக்கியமானது.
அதனை உணர்ந்து பணியாற்றிட வேண்டும் என்று வேண்டுகோள்விடுத்தார். தொடர்ந்து கொரானா தடுப்பூசி முகாமில் கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சுப மதியரசன் இளையான்குடி நகரச் செயலாளர் நஜிமுதீன், ஒன்றிய கவுன்சிலர் முருகன், கண்ணமங்கலம் கூட்டுறவு சங்கத் தலைவர் தமிழரசன், தடியமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் ஜோதி சேகர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.