• Fri. Mar 29th, 2024

இருசக்கர ஊர்தி பேரணி வேண்டும்- பாமக நிறுவனர் ராமதாஸ்

ஒவ்வொரு ஒன்றியத்திலும் இருசக்கர ஊர்தி பேரணி நடத்த வேண்டும் என்று கட்சியினருக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் உத்தரவிட்டுள்ளார்.

2026இல் ஆட்சியைப் பிடிக்க வேண்டும், அன்புமணியை முதல்வராக்க பாமகவினர் உழைக்க வேண்டும் என்று ராமதாஸ் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். பாமக நிர்வாக சீரமைப்பு நடவடிக்கைகளின் ஒருகட்டமாகக் கிட்டத்தட்டத் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் புதிய மாவட்டச் செயலாளர்கள் நியமிக்கப்பட்டனர். புதிதாக நியமிக்கப்பட்டவர்களுக்குக் கடந்த 4ஆம் தேதி ராமதாஸ் கடிதம் எழுதினார். அதில், 2026இல் ஆட்சியைப் பிடிக்கக் கடுமையாக உழைக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில் நேற்று (டிசம்பர் 7) மற்றொரு கடிதம் ஒன்றை எழுதியுள்ள ராமதாஸ், “நான் எழுதிய கடிதத்தைப் பெற்ற மாவட்டச் செயலாளர்களில் சிலர், அந்தக் கடிதத்தில் கேட்டுக் கொண்டிருந்தவாறு கிராமங்களுக்குச் சென்று மக்களைச் சந்திக்கத் தொடங்கியிருக்கிறார்கள். இன்னும் பலர் அந்தப் பணியை தொடங்கவில்லை. அவர்களும் அடுத்த ஓரிரு நாட்களில் மக்களை சந்திக்கும் பணியைத் தொடங்குவார்கள் என்று நம்புகிறேன். அனைவரின் செயல்பாடுகளையும் நான் கண்காணித்துக் கொண்டுதான் இருக்கிறேன். சிறப்பாகச் செயல்படுபவர்களுக்குப் பாராட்டுகளும், செயல்படாதவர்களுக்குக் கண்டிப்புகளும் உறுதி.

டிசம்பர் 4ஆம் தேதிக்குப் பிறகு பல மாவட்டச் செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தங்களுக்கு பதவி கிடைப்பதற்கு முன்பே அந்தக் கடிதத்தைப் படித்திருக்கக்கூடும். படித்தவர்கள் அந்தக் கடிதத்தில் உள்ள அம்சங்களை நினைவூட்டிக் கொள்ளுங்கள். கடிதத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளவாறு புதிய மாவட்டச் செயலாளர்களும் மக்கள் சந்திப்பைத் தொடங்குங்கள்.

மக்கள் சந்திப்பைத் தொடர்ந்து அடுத்தகட்ட பணி நமக்குக் காத்திருக்கிறது. கட்சி அமைப்பு ரீதியான ஒன்றியங்களில் இருசக்கர ஊர்தி பேரணி நடத்துவதுதான் நமது அடுத்தகட்ட பணி ஆகும். நமது கட்சியின் அமைப்பு ரீதியிலான ஒன்றியம் என்பது 20 முதல் 25 கிராமங்களை உள்ளடக்கியது ஆகும். ஒவ்வொரு ஒன்றியத்திலும் குறைந்தது 1,000 பேர் இருசக்கர ஊர்திகளில் கட்சி ரீதியிலான ஒன்றியத்திற்குட்பட்ட கிராமங்களுக்குச் சென்று நமது கொள்கைகளையும் சாதனைகளையும் சொல்ல வேண்டும். ஏதேனும் ஒரு கிராமத்தில் அங்குள்ள மக்கள் வழங்கும் உணவைச் சாப்பிட்டு அனைத்துத் தரப்பு மக்களையும் சந்தித்து ஆதரவைத் திரட்டுவதுதான் இந்தத் திட்டத்தின் நோக்கம் ஆகும்.

ஒன்றிய அளவிலான இருசக்கர ஊர்தி பேரணியைத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒன்றியங்களில் நானே நேரில் வந்து தொடங்கி வைக்க உள்ளேன். மாவட்டச் செயலாளர்களும், ஒன்றிய செயலாளர்களும் இணைந்து இதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுங்கள். இது தொடர்பான அறிவிப்பைக் கட்சித் தலைமை விரைவில் வெளியிடும். மக்கள் ஆதரவை வெல்வோம்… புதியதோர் தமிழகம் படைப்போம்” என்று குறிப்பிட்டுள்ளார்.இந்த அறிவிப்பைத் தொடர்ந்து இருசக்கரப் பேரணிக்கு பாமகவினர் தயாராகி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *