• Sun. May 19th, 2024

விழுப்புரம் ஊராட்சி தலைவர் மோசடி செய்வதாக புகார்

Byவிஷா

May 7, 2024

விழுப்புரம் அருகே பஞ்சமாதேவி ஊராட்சியை சேர்ந்த ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் கையெழுத்தை போலியாக பதிவு செய்து ஊராட்சி தலைவர் மோசடியில் ஈடுபடுவதாக மாவட்ட ஆட்சியரை சந்தித்து புகார் மனு ஒன்றை அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் ஒன்றியத்துக்கு உட்பட்ட பஞ்சமாதேவி ஊராட்சியை சேர்ந்த ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் மாவட்ட ஆட்சியரை சந்தித்து புகார் மனு ஒன்றை அளித்தனர். அதில் பஞ்சமாதேவி ஊராட்சி மன்ற தலைவராக திமுகவைச் சேர்ந்த செல்வம் என்பவர் இருந்து வருவதாகவும் அவர் வார்டு உறுப்பினர்களின் அனுமதியின்றி தன்னிச்சையாக செயல்பட்டு வருவதாகவும் கூட்டத்தில் மேற்கொள்ளப்படும் பல்வேறு தீர்மானங்களை உறுப்பினர்களின் கருத்துக்களை கேட்காமல் தன்னிச்சையாக நிறைவேற்றி வருவதாக குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், கிராமப் பகுதிகளில் அமைக்கப்படும் மனை பிரிவுகள், ரியல் எஸ்டேட் உரிமையாளர்களிடம் மற்றும் மக்கள் நல பணிகளில் வார்டு உறுப்பினர்களின் கையெழுத்தை போலியாக ஊராட்சி மன்ற தலைவர் அவரே கையொப்பமிட்டு லட்சக்கணக்கில் பணம் பெற்றுள்ளார். மேலும் அலுவலகம் மற்றும் வங்கிகளில் வார்டு உறுப்பினர்களின் கையெழுத்தை போலியாக போட்டு பல்வேறு முறைகேடுகள் மூலம் தொடர்ந்து ஊழல் செய்து வருகிறார். இதுகுறித்து பல முறை வட்டார வளர்ச்சி அலுவலரிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காமல் ஆளும் கட்சி பிரமுகர் என்பதால் அவருக்கு அனைத்து துறை அதிகாரிகளும் துணை போவதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர்.
மேலும், உறுப்பினர்களின் கையெழுத்துகளை ஊராட்சி மன்ற தலைவர் போலியாக போட்டு தீர்மானம் நிறைவேற்றியுள்ளதாக கூறி பண மோசடியில் ஈடுபட்டுள்ளது குறித்து வளவனூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் மக்களின் அடிப்படை வசதிகள் கூட செய்யாமல் விற்கப்படும் மனைப்பிரிவுகளை பதிவு செய்யாமல் இருக்க பத்திர பதிவு துறையிடமும் மனு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை எவ்வித விசாரணையும் நடத்தப்படவில்லை என கூறியுள்ள உறுப்பினர்கள், முறைகேடுகள் குறித்து கேட்டாலோ, புகார் அளித்தாலோ திமுக ஊராட்சி மன்ற தலைவர் செல்வம், வார்டு உறுப்பினர்களை மிரட்டுவதாகவும் அதற்கு அதிகாரிகளும் காவல்துறையும் துணைபோவதாக குற்றம் சாட்டிய வார்டு உறுப்பினர்கள் தலைவரின் மோசடி குறித்து ஆட்சியர் விசாரணை மேற்க்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *