மழைக்காலங்களில் இடுப்பளவு தண்ணீரில் நடந்து சென்று பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் அவதிப்படுவதாக கூறி திருமணிமுத்தாறு ஆற்றின் குறுக்கே பாலம் அமைத்து தரக் கோரி கிராம மக்கள் சேலம் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்….
சேலம் மாவட்டம் அயோத்தி பட்டினம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கோரத்துபட்டி ஊராட்சி பக்கிரி காடு கிராம பகுதியில் 150க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் சுமார் 70 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகின்றனர். சேர்வராயன் மலையில் இருந்து உற்பத்தியாகி வரும் திருமணிமுத்தாறு ஆற்றை கடந்து நகருக்கு செல்ல வேண்டிய சூழ்நிலையில் பாலம் ஏதுமின்றி மழை காலங்களில் இடுப்பளவு தண்ணீரில் நடந்து வரக்கூடிய சிரமமான சூழ்நிலை இருந்து வருகிறது.
இந்த நிலையில் பள்ளிக்கு செல்லும் பள்ளி குழந்தைகள் ஆற்றைக் கடந்து செல்ல முடியாத சூழ்நிலை நிலவி வருவதால் திருமணிமுத்தாறு ஆற்றின் குறுக்கே பாலம் அமைத்து தர வேண்டும் என கிராம மக்கள் 50க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்து கோரிக்கை விடுத்துள்ளனர்.