• Tue. May 7th, 2024

நாளை மாலை விஜயகாந்த் உடல் நல்லடக்கம்..!

Byவிஷா

Dec 28, 2023

நடிகர் விஜயகாந்தின் பூத உடல், கோயம்பேட்டில் உள்ள தேமுதிக கட்சி அலுவலகத்தின் முன்புறம், நாளை மாலை 4.35 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும் என தேமுதிக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
நடிகரும், தேமுதிக கட்சி நிறுவனருமான புரட்சி கலைஞர் விஜயகாந்த் உடல் நலக்குறைவால் காலமானார். இன்றைய தினம் முழுவதும் விஜயகாந்த் உடல் கட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படும். நாளை மாலை 4.35 மணிக்கு தேமுதிக கட்சி அலுவலகத்தின் முன்புறம் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட உள்ளதாக தேமுதிக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக தேமுதிக அலுவலகத்தில் வைக்கப்பட உள்ளது. ரசிகர்கள், தொண்டர்கள் கண்ணீர் விட்டு கதறி அழும் காட்சி உறைய வைக்கிறது.
சினிமாவிலும், பொதுவாழ்விலும் தனி இடத்தை பிடித்து கேப்டனாக கொண்டாடப்பட்டு வருகிறார். இவரது மறைவுக்கு திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார். அத்துடன் அரசு மரியாதையுடன் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படும் எனக் கூறியுள்ளார்.
அன்பிற்கினிய நண்பர் கேப்டன் விஜயகாந்த் மறைவெய்திய செய்தி பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. நல்ல உள்ளத்திற்கு சொந்தக்காரரான அவர் திரையுலகிலும் பொதுவாழ்விலும் தனது கடும் உழைப்பினால் வெற்றிகரமான முத்திரைகளைப் பதித்த சாதனையாளர்.
நடிகராக, நடிகர் சங்கத் தலைவராக, அரசியல் கட்சித் தலைவராக, சட்டமன்ற உறுப்பினராக, எதிர்க்கட்சித் தலைவராக அவர் ஏற்றுக்கொண்ட பணி எதுவாக இருந்தாலும் அதில் முழுமையாகத் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு தன்னைச் சார்ந்த அனைவருக்கும் உறுதுணையாக இருந்தவர். குடும்ப நண்பராக என்னிடம் பழகியவர். முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் மீது என்றென்றும் தனிப்பாசம் கொண்டவர்.
தனது திருமணம் உள்ளிட்ட குடும்ப நிகழ்வுகளைத் தலைவர் கலைஞர் தலைமையில் நடத்திய தமிழ் உணர்வாளரான நண்பர் விஜயகாந்த், நடிகர் சங்கத்தலைவராக இருந்தபோது தலைவர் கலைஞர் அவர்களின் கலையுலகப் பொன்விழாவைப் பாராட்டி, திரையுலகின் சார்பில் மாபெரும் விழா எடுத்து, தங்கப் பேனாவை பரிசாக அளித்தவர். தலைவர் கலைஞர் அவர்கள் உடல்நலன் குன்றியிருந்தபோது, நேரில் வந்து உடல்நலன் விசாரித்து சென்றதுடன், தலைவர் கலைஞர் மறைவெய்தியபோது, வெளிநாட்டில் இருந்த நண்பர் விஜயகாந்த் கண்ணீர் மல்க காணொளி அனுப்பி தன் இரங்கலைத் தெரிவித்ததையும், வெளிநாட்டிலிருந்து திரும்பியதும் விமான நிலையத்திலிருந்து நள்ளிரவில் நேராகச் சென்னை கடற்கரையில் உள்ள தலைவர் கலைஞரின் ஓய்விடம் சென்று தன் வணக்கத்தைச் செலுத்தியதையும் எவரும் மறக்க முடியாது.
தமிழுணர்வும் தாராள மனமும் கொண்ட உன்னத மனிதரான நண்பர் விஜயகாந்த் அவர்களுடன் கலைத்துறையில் இணைந்து செயல்பட்ட காலங்கள் நெஞ்சில் நிழலாடுகின்றன. முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் வசனத்தில் விஜயகாந்த் கதாநாயகனான நடித்த ‘மக்கள் ஆணையிட்டால்’ என்ற படத்தில், கலைஞர் எழுதிய பாடல் காட்சியில் நானும் பங்கேற்றிருந்தது நினைவில் மலர்கிறது.
அவருடனான நட்பு எந்தக் காலத்திலும், எத்தகைய அரசியல் சூழலிலும் மாறவேயில்லை. நண்பர் விஜயகாந்த் உடல்நலன் குன்றியிருந்த நிலையில், இரண்டு முறை நேரில் சென்று சந்தித்து, அவர் விரைந்து நலம் பெற விரும்பினேன். இயற்கை இரக்கமின்றி என் நண்பரின் வாழ்வை எடுத்துக் கொண்டிருக்கிறது.
கேப்டன் எனத் தமிழ் மக்களால் அன்புடன் அழைக்கப்படும் அன்பு நண்பர் விஜயகாந்த் அவர்களின் மறைவு தமிழ்நாட்டிற்கும் திரையுலகிற்கும் பேரிழப்பாகும். இந்த மிகத் துயரமான சூழலில், என்னை நானே தேற்றிக் கொண்டு, சகோதரி பிரேமலதா விஜயகாந்த் உள்ளிட்ட அவரது குடும்பத்தினருக்கும், தேமுதிக தொண்டர்களுக்கும், திரையுலகத்தினருக்கும், ரசிகர்களுக்கும் என் ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன். விஜயகாந்த் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அவரது இறுதிப் பயணத்திற்கு முழு அரசு மரியாதை வழங்கப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *