மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் உடல் ரசிகர்கள் மற்றும் பொதுமக்களின் அஞ்சலிக்காக சென்னை தீவுத்திடலில் வைக்கப்பட்டுள்ளது.
நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மூச்சு விட சிரமப்பட்டதால் வெண்டிலேட்டர் உதவியுடன் அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நுரையீரல் அழற்சி காரணமாக சிகிச்சை பலனின்றி உயிர் பிரிந்ததாக மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்ட, விஜயகாந்தின் உடலுக்கு அரசியல் தலைவர்கள், தொண்டர்கள், திரையுலகினர், ரசிகர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் தொண்டர்கள், ரசிகர்கள் அதிக அளவில் கூடியதால் அவரது உடல் தீவுத்திடலில் வைக்கப்பட்டு அஞ்சலி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டது.
அதன்படி இன்று காலை 6 மணிக்கு விஜயகாந்தின் உடல் தீவுத்திடல் கொண்டு வரப்பட்டது. அங்கு அவரின் உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மதியம் 1 மணி வரை உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படும்.
பின்னர் பூந்தமல்லி நெடுஞ்சாலை வழியாக இறுதி ஊர்வலம் நடைபெற்று தேமுதிக தலைமையகம் சென்றடையும். அங்கு மாலை 4.45 மணிக்கு அரசு மரியாதையுடன் தேமுதிக தலைவர் விஜயகாந்தின் உடல் நல்லடக்கம் செய்யப்படும்.