நடிகர் விஜயகாந்த் மறைவையொட்டி, தமிழகம் முழுவதும் காலைக்காட்சிகள் ரத்து செய்யப்படுவதாக, தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
சென்னை மியாட் மருத்துவமனையில் மீண்டும் சிகிச்சைக்காக நடிகரும், தேமுதிக நிறுவன தலைவருமான விஜயகாந்த் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதால் விஜயகாந்த், வெண்டிலேட்டர் சிகிச்சையில் இருப்பதாகவும் தேமுதிக அறிக்கை வெளியிட்டிருந்த நிலையில், சிகிச்சைப் பலனின்றி நடிகர் விஜயகாந்த் இன்று காலை காலமானார்.
அவரது உடல், மியாட் மருத்துவமனையில் இருந்து சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான தேமுதிக தொண்டர்கள் விருகம்பாக்கத்தில் விஜயகாந்த் வீட்டின் முன்பு கூடியுள்ளனர். கேப்டன் விஜயகாந்தின் மறைவு, தொண்டர்களைப் பதற்றமடைய செய்துள்ளது.