முன்னாள் அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது பணமோசடி புகார் கொடுத்த விஜய நல்லதம்பி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விஜய நல்லதம்பி கொடுத்த ரூ.3 கோடி பணமோசடி புகாரில்தான் ராஜேந்திர பாலாஜி கைதாகி சிறை சென்றிருந்தார்
அதிமுக முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.3 கோடி பணமோசடி செய்ததாக அவர் மீது கொடுக்கப்பட்ட புகார் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. முன்ஜாமீன் மனுக்களும் தள்ளுபடியான நிலையில் ராஜேந்திர பாலாஜி தலைமறைவானார்.
10 நாட்களுக்கும் மேலாக தீவிர தேடலுக்குப்பின் கர்நாடகாவில் வைத்து அவரை தனிப்படை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதற்கிடையில் ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் ராஜேந்திர பாலாஜி மனு தாக்கல் செய்திருந்தார்.
விசாரணைக்குப் பிறகு, முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு 4 வாரம் நிபந்தனை ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்ததையடுத்து, அவர் ஜாமீனில் வெளிவந்துள்ளார்.
இந்நிலையில் முன்னாள் அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது பணமோசடி புகார் கொடுத்த விஜய நல்லதம்பி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.30 லட்சம் பெற்றுக்கொண்டு, அமைச்சர் ராஜேதிர பாலாஜி மோசடி செய்ததாக ரவீந்திரன் என்பவர் அளித்த புகாரில், 3 மாத காலம் தலைமறைவாக இருந்த விஜய நல்லதம்பியை கோவில்பட்டியில் தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட விஜய நல்லதம்பி விருதுநகர் குற்றப்பிரிவு காவல்நிலையத்திற்கு அவரை அழைத்து வந்து விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
பணமோசடியில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை நடத்தவுள்ளனர் என்று கூறப்படுகிறது. விஜய நல்லதம்பி கொடுத்த ரூ.3 கோடி பணமோசடி புகாரில்தான் ராஜேந்திர பாலாஜி கைதாகி சிறை சென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.