• Mon. Apr 21st, 2025

ஜனவரி 20 பரந்தூர் செல்கிறார் விஜய்… காவல்துறை அனுமதி!

ByP.Kavitha Kumar

Jan 18, 2025

பரந்தூர் கிராம மக்களை நேரில் சந்திக்க தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய்க்கு காவல்துறை அனுமதி அளித்துள்ளது.

காஞ்சிபுரம் அடுத்த பரந்தூர் ஏகனாபுரம் பகுதியில் இரண்டாவது பசுமை விமான நிலையம் அமைக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் முடிவு செய்த நிலையில் அதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இதற்காக காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் சுமார் சுமார் 5,100 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. இதற்கு 13 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து கடந்த 900 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதற்கு பல்வேறு அரசியல் கட்சிகள் ஆதரவு தெரிவித்து வருகின்றன.

இந்த போராட்டத்தில் அரசியல் கட்சியினர் கொள்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பரந்தூர் போராட்ட குழுவினருக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் விக்கிரவாண்டியில் நடைபெற்ற தமிழக வெற்றிக்கழக மாநாட்டில் பரந்தூர் விமான நிலைய திட்டத்தை கைவிட கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதனிடையே, நாளை மறுநாள் (ஜன. 20) பரந்தூர் கிராம மக்களை தவெக தலைவர் விஜய் நேரில் சந்தித்து பேச அனுமதி மற்றும் பாதுகாப்பு வழங்க கோரி தமிழக டிஜிபி மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோருக்கு மனு கொடுக்கப்பட்டிருந்தது. மேலும் விமான நிலைய எதிர்ப்பு குழுவினரை தவெக தலைவர் விஜய் சந்திப்பதற்காக நடைபெற்று வந்த பணிகளை நேற்று தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

இந்நிலையில், பரந்தூர் கிராம மக்களை சந்திக்க தவெக தலைவர் விஜய்க்கு காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது. இதனால் நாளை மறுநாள் (ஜன.20) ஏகனாபுரம் கிராம மக்களை சந்தித்து விஜய் ஆதரவு தெரிவிக்கிறார்.