மதுரையில் விஜயதசமியையொட்டி நடந்த ஏடு தொடங்கும் வித்யாரம்பம் நிகழ்ச்சி – ஏராளமான குழந்தைகள் பங்கேற்பு
நவராத்திரி விழாவின் பத்தாவது நாள் விஜயதசமி விழாவான இன்று குழந்தைகளுக்கான கல்வி தொடங்கும் வகையில் ஏடு தொடங்கும் நிகழ்ச்சி கோயில்கள் பள்ளிகளில் நடைபெற்றது.இதில் பெற்றோர்களுடன் ஏராளமான குழந்தைகள் பங்கேற்றனர்.
நவராத்திரியில் முப்பெருந்தேவிகளின் பூஜைகள் முடிந்த பின்பு, 10-வது நாளன்று குழந்தைகள் கல்வி கற்க தொடங்கும் புனித நாளாக விஜயதசமி கொண்டாடப்படுகிறது. கல்வி, கலைகள் என இந்நாளில் எது தொடங்கினாலும் வெற்றியுடன் முடியும் என்பது நம்பிக்கையாக உள்ளது.
அந்த வகையில் மழலை குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பதற்கும், பாட்டு, இசைக் கருவிகள், நடனம் ஆகிய பயிற்சிகள், பிறமொழி பயிற்சி, புதிதாக ஒரு தொழிலை கற்றுக்கொள்வது ஆகியவற்றை இந்த நாளில் தொடங்குவதும் வழக்கம். அதன்படி இன்று குழந்தைகளுக்கு வித்யாரம்பம் நிகழ்ச்சி மதுரையின் பல்வேறு இடங்களில் சிறப்பாக நடைபெற்றது.
மதுரை ரிசர்வ் லைன் ராமகிருஷ்ண மடத்தில் விஜயதசமி விழாவை முன்னிட்டு குழந்தைகளுக்கு அட்சயராப்யாசம் எனும் வித்யாரம்பம் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.
ராமகிருஷ்ண மடத்தின் தலைவர் கமலாத்மா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஏராளமான பெற்றோர்கள் குழந்தைகளுடன் பங்கேற்றனர். மேலும் நவராத்திரி விழாவை முன்னிட்டு எட்டு அடி உயர துர்கா தேவி சிலைக்கு தினமும் பூஜைகள் ஆராதனைகள் நடத்தப்பட்டு புதிதாக கல்வியை துவக்கும் குழந்தைகளுக்கு அட்சயராப்யாசம் செய்து வைக்கப்பட்டது.