• Tue. May 7th, 2024

மஹாசிவராத்திரி விழாவில் துணை ஜனாதிபதி பங்கேற்பு

Byவிஷா

Mar 6, 2024

மார்ச் 8ஆம் தேதியன்று, கோவை ஈஷா யோகா மையத்தில் நடைபெறும் மஹாசிவராத்திரி விழாவில், துணை ஜனாதிபதி ஜெகதீப்தன்கர் சிறப்பு விருந்தினராக பங்கேற்க உள்ளார்.
கோவை ஈஷா யோகா மையத்தில் 30-ம் ஆண்டு மஹாசிவராத்திரி விழா வரும் 8-ம் தேதி மாலை 6 மணிக்கு தொடங்கி மறுநாள் காலை 6 மணி வரை ஆதியோகி முன்பு கொண்டாடப்பட உள்ளது. சத்குரு முன்னிலையில் நடைபெறும் இவ்விழாவில் சக்திவாய்ந்த தியானங்கள், மந்திர உச்சாடனைகள், லிங்க பைரவி தேவியின் மஹா யாத்திரை, ஆதியோகி திவ்ய தரிசனம் உள்பட பல்வேறு அம்சங்கள் இடம்பெற உள்ளன.
இந்த நிகழ்வில் துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் சிறப்பு விருந்தினராக பங்கேற்க உள்ளார். இவ்விழாவில் நேரிலும், நேரலையிலும் பங்கேற்கும் கோடிக்கணக்கான மக்களை இரவு முழுவதும் விழிப்பாக வைத்து கொள்வதற்காக பல்வேறு இசை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட உள்ளன.
இதில் பிரபல பின்னணி பாடகர் சங்கர் மகாதேவன், தமிழ் நாட்டுப்புற பாடகர் மஹாலிங்கம், பஞ்சாபி இசை கலைஞர் குர்தாஸ் மான், கர்நாடக இசை கலைஞர் சந்தீப் நாராயணன், பாலிவுட் இசை கலைஞர்கள் ப்ரித்வி கந்தர்வ், ரஞ்ஜித் பட்டரசர்ஜி, பாரடெக்ஸ் (தனிஷ்க் சிங்) உள்ளிட்ட தேசத்தின் தலைசிறந்த கலைஞர்கள் பங்கேற்க உள்ளனர். இது தவிர, ஆப்பிரிக்கா, லெபனான், பிரான்ஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த இசை மற்றும் நடன குழுவினரும் பங்கேற்க உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *