


தேனி அருகே உள்ள வீரபாண்டி கவுமாரியம்மன் கோவில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு கொடியேற்றம் மற்றும் கம்பம் நடும் விழா நடைபெற்றது.

தேனி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற வீரபாண்டி கவுமாரியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டுக்கான திருவிழா அடுத்த மாதம் 6-ந் தேதி செவ்வாய்க்கிழமை தொடங்கி 13-ந் தேதி செவ்வாய்க்கிழமை வரை நடைபெற உள்ளது. இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் அடுத்த மாதம் 9-ந் தேதி வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது.

இந்த திருவிழாவிற்கான கொடியேற்றம் மற்றும் கம்பம் நடும் விழா இன்று நடைபெற்றது. இதற்காக அத்தி மரத்திலான திருக்கம்பம் சத்திரப்பட்டியில் உள்ள அனுமந்தராய பெருமாள் கோவில் பகுதியில் இருந்து வெட்டி முல்லை பெரியாற்றங்கரையில் அமைந்துள்ள கண்ணீஸ்வரமுடையார் கோவிலில் இருந்து ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு கவுமாரியம்மன் கோவிலில் அம்மன் முன்பு ஊன்றப்பட்டது.
இதனைத்தொடர்ந்து திருக்கம்பத்திற்கு பக்தர்கள் புனித நீர் ஊற்றி வழிபட்டனர். அதுபோல திருவிழாவிற்காக தீச்சட்டி, ஆயிரம் கண்பானை போன்ற நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்கள் விரதம் இருந்து கங்கணம் கட்டி செல்கின்றனர்.

இந்த கம்பம் நடும் நிகழ்வில் தேனி எம்.பி., தங்க தமிழ்ச்செல்வன், கோவில் செயல் அலுவலர் நாராயணி, வீரபாண்டி பேரூராட்சி தலைவர் கீதா சசி, செயல் அலுவலர் கணேசன், வீரபாண்டி பேரூர் திமுக செயலாளர் செல்வராஜ், தொழிலதிபர் சக்தி உள்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர். கம்பம் நடும் விழாவிற்கு வந்திருந்த பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

