தேனி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் கடந்த சில நாட்களாக மழை இல்லாததால், வைகை அணையின் நீர் மட்டம் கனிசமாக குறைந்து வருகிறது.
தேனி அருகே மிக பிரமாண்டமாக அமைந்துள்ள வைகை அணைக்கு கேரளா மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்யும் மழை காரணமாக நீர் வரத்து வருகிறது. மேலும் முல்லை பெரியாறு அணையின் திறப்பின் போதும் நீர் வரத்து அதிகமாக ஏற்படும். இதுபோன்ற பல காரணங்களால் வைகை அணையின் நீர் மட்டம் அவ்வப்போது உயர்ந்து வருவது வழக்கம். அணையின் நீர் மட்டத்தை பொறுத்து மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கும் குடிநீர் மற்றும் விவசாய பணிக்காக தண்ணீர் திறந்துவிடப்படும்.
இந்நிலையில் நடப்பாண்டில் மட்டும் வைகை அணை 3 முறை முழு கொள்ளளவை ( மொத்தம் 71 அடி உயரம்) எட்டியது. இதனால் அணையின் பாதுகாப்பு கருதி அவ்வப்போது ராட்சத மதகுகள் வழியாக தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் 5 மாவட்ட விவசாயிகளும் மகழ்ச்சியடைந்தனர்.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக கேரளா மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை இல்லாததால் வைகை அணைக்கு நீர் வரத்து குறைந்துள்ளது. இதனால் அணையின் நீர் மட்டமும் கனிசமாக குறைந்து வருகிறது. இதற்கிடையில் அணையின் அழகை ரசிக்க வார விடுமுறை நாட்களான சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து உள்ளது.