தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை காரணமாகவும், முல்லைப் பெரியாற்றில் இருந்து வினாடிக்கு 2305 கனஅடி தண்ணீர் தமிழக பகுதிக்கு திறந்து விடப்பட்டுள்ளதாலும், 71அடி உயரமுள்ள வைகை அணையின் நீர்மட்டம் நேற்று காலை நிலவரப்படி 64.67 அடியாக இருந்தது. ஒரிரு நாளில் முழு கொள்ளளவை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த சில நாட்களாக தேனி மாவட்டத்தில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இதனால் கொட்டக்குடி ஆறு ,முல்லைப் பெரியாறு, வருஷநாடு வைகை ஆறு ஆகிய பகுதிகளிலிருந்து ஆற்றின் வழியாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வைகை அணை நீர்தேக்கத்திற்கு கூடுதல் வந்து தண்ணீர் வந்து சேர்கிறது. நேற்று காலை நிலவரப்படி விநாடிக்கு 4175 கன அடி நீர் வந்துகொண்டிருக்கிறது.
அணையிலிருந்து பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1369 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறதுஅணையில் 67 அடியை எட்டியதும் முதல் வெள்ள அபாய எச்சரிக்கையும், 68.5 வந்ததும் 2வது வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு, 69 அடியை எட்டியதும் அணைக்கு வரும் நீர் அப்படியே வெளியேற்றப்படும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.வரலாறு காணாத அளவில் இந்த வருடம் பல மாதங்களாக அணையின் நீர்மட்டம் 60 அடிக்கு குறையாமல் இருப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.