ஆசிய அளவில் முதல் முறையாக 200க்கும் மேற்பட்ட டார்க் சாக்லேட்டுகளை தயாரித்து அசத்திய உதகை ஹோம்மேடு சாக்லேட் கம்பெனி, இந்தியா புக் ஆப் ரெக்கார்டில் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் தேயிலை மற்றும் மலைகாய்கறி விவசாயத்திற்கு அடுத்த படியாக சுற்றுலா பயணிகளிடம் ஹோம்மேடு சாக்லேட்டுகளுக்கு தனி வரவேற்பு உள்ளது.குறிப்பாக உதகையில் தயாரிக்கப்படும் ஹோம்மேடு சாக்லேட்டுகளை இங்கு வரும் சுற்றுலா பயணிகள் அனைவரும் விரும்பி வாங்கி செல்கின்றனர்.இந்நிலையில் உதகையில் கடந்த 2000ம் ஆண்டு முதல் ஹோம்மேடு சாக்லேட்டுகள் தயாரிக்கும் தனியார் நிறுவனம் ஒன்று முதல் முறையாக தற்போது 200 வகையான டார்க் ஹோம்மேடு சாக்லேட்டுகளை தயாரித்து சாதனைப்படைத்துள்ளது.
குறிப்பாக டார்க் பிஸ்தா, வால்நாட், ரெட் பிளம், ரோஸ்மேரி, ஜின்ஜர், சைபரல் நா, லெமன் கிராஸ், ஆரஞ்சு பிக்கோட்டி உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட டார்க் சாக்லேட்டுகள் தயாரிக்கப்பட்டு அசத்தியுள்ளது. இதன் நன்மைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதோடு, இங்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு சாக்லேட்டுகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டு வருகிறது.இங்கு தயாரிக்கப்பட்டுள்ள ஹோம்மேடு சாக்லேட்டுகள் 50 ரூபாயில் இருந்து ஒரு லட்சம் ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.இந்நிலையில் 187 வகையான டார்க் சாக்லேட்டுகள் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளது. இந்நிறுவனத்தினர் இந்தியா புக் ஆப் ரெக்கார்டில் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளனர். இதற்காக சான்றிதழ் இந்தியா புக் ஆப் ரெக்கார்டு பொறுப்பாளர் விவேக் வழங்கியது குறிப்பிடதக்கது.