தமிழகத்தில் மின் கட்டண உயர்வு, கட்டுமான பொருட்கள் விலை உயர்வு, வரி உயர்வு, பால் விலை உள்ளிட்ட விலைவாசி உயர்வை கண்டித்து எதிர்க்கட்சியான அதிமுக சார்பில் தமிழகம் முழுவதும் ஆளும் திமுக ஆட்சியை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்று வருகிறது.
இதன் ஒரு கட்டமாக உதகை கிழக்கு ஒன்றியம் அதிமுக சார்பில் மாவட்ட செயலாளர் கப்பச்சி வினோத் தலைமையில் தும்மனட்டி கிராமத்தில் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தாத ஆளும் திமுக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசிய மாவட்ட செயலாளர் தமிழகத்தில் பொம்மை முதலமைச்சராக ஸ்டாலினும், பொம்மை அமைச்சராக வனத்துறை அமைச்சர் உள்ளிட்ட அமைச்சர்களால் செயலற்ற ஆட்சியை நடத்தி வருவதாகவும், மக்கள் நலனை பார்க்காமல் தனது குடும்பத்தின் நலனை மட்டும் பார்த்து வருவதாகவும், திமுகவின் தேர்தல் வாக்குறுதியில் குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என தெரிவித்து இது நாள் வரை ஆயிரம் ரூபாய் வழங்காமல் திமுக அரசு இழுத்தடித்து வருவது தமிழக மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்தார்.
மேலும் ஆணிக்கல் ஆற்றில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்த 4 பெண் பக்தர்களுக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து தமிழக அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பபட்டன.