தென் மாவட்டங்களில் கன மழையால் பாதிக்கப்பட்டுள்ள நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட பல்வேறு மாவட்ட பகுதிகளில் மழைநீர் தேங்கி கிராம பகுதிகளை விட்டு வெளியில் வரமுடியாத சூழல் காணப்படுகிறது., இதனால் தங்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு, உணவு, மின்சாரமின்றி மக்கள் மழைநீரில் தவித்து வரும் சூழலில் பல்வேறு கட்சியினர் மற்றும் தன்னார்வ அமைப்பினர் நிவாரண பொருட்களை வழங்கி அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றியம் சார்பில், ஊராட்சி ஒன்றிய அலுவலக பணியாளர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள் ஒருங்கிணைந்து நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட பல்வேறு தென் மாவட்ட மக்களுக்கு சுமார் 1 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் அரிசி, பருப்பு, எண்ணெய், சீனி, பிஸ்கட் உள்ளிட்ட நிவாரண பொருட்களை அனுப்பி வைத்தனர்.
உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலிருந்து உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றிய சேர்மன் ரஞ்சனி சுதந்திரம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தங்கவேல், கண்ணன் உள்ளிட்டோர் பொருட்களை வாகனத்தில் ஏற்றி மதுரைக்கு அனுப்பி வைத்தனர்.