• Sun. May 5th, 2024

திருமங்கலம் – ராஜபாளையம் சாலையில், கிராம மக்கள் திடீர் மறியல்…

ByKalamegam Viswanathan

Dec 20, 2023

திருமங்கலம் – ராஜபாளையம் தேசிய நெடுஞ்சாலையில் , ஆலம்பட்டி என்ற இடத்தில் கிராம மக்கள் திடீர் சாலை மறியல் – 20 நிமிட சாலை மறியலால் போக்குவரத்து பாதிப்பு. மதுரை மாவட்டம் திருமங்கலம் – ராஜபாளையம் தேசிய நெடுஞ்சாலையில், ஆலம்பட்டி என்ற இடத்தில், அக்கிராமத்தைச் சார்ந்த 50க்கும் மேற்பட்டோர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அக்கிராமத்தில் ஏற்கனவே கட்டப்பட்ட, பழைய பொது கழிப்பிட கட்டடத்தை நான்கு வழி சாலை அமைக்கப்பட்டு வருவதால் அதனை இடிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து மாற்று இடத்தில் புதிதாக பொதுக் கழிப்பிடத்தை கட்டுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில், அந்த இடத்தில் கிராமத்தைச் சார்ந்த தனிநபர் ஒருவர் அந்த இடத்தை ஆக்கிரமித்து வைத்துள்ளதால், கிராம நிர்வாக அலுவலர், ஊராட்சி ஒன்றிய அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகளும், அவருக்கு உடந்தையாக செயல்படுவதாக கூறி கிராம மக்கள் ஆவேசம் அடைந்து, பொதுக்கழிப்பிடத்திற்கான இடத்தை மீட்டு தரக்கோரி, சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இம்மறியல் தொடர்ந்து 20 நிமிடத்திற்கு மேலாக நீடித்ததால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் உரிய நடவடிக்கை எடுக்க உறுதி அளித்ததால் , கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *