ஹெல்மெட் அணியாத இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு பெட்ரோல் வழங்கக்கூடாது என உத்தரப் பிரதேச அரசு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
உத்தரப் பிரதேசத்தில் சாலை விபத்துகள் அதிகரித்துள்ளன. இதனைக் குறைக்க சாலை விதிகளை கடுமையாக அமல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. இதில் இரு சக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிவதைக் கட்டாயமாக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்காக ஹெல்மெட் அணியாத இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு பெட்ரோல் வழங்கக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் போக்குவரத்து கமிஷனர் பிரஜேஷ் நராயண் சிங் கடிதம் அனுப்பி உள்ளார். அதில், ” சாலை பாதுகாப்பு தொடர்பாக இந்த மாதத் தொடக்கத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் நடத்திய ஆய்வுக்கூட்டத்தில், விபத்துகள் அதிகரித்து வருவதும், ஆண்டுக்கு 25 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் உயிரிழப்பதும் சுட்டிக்காட்டப்பட்டது. இதில் பெரும்பாலானவர்கள் இருசக்கர வாகன ஓட்டிகள் என்பதும், ஹெல்மெட் அணியாததால் இந்த உயிரிழப்புகள் நடைபெறுவதும் கண்டறியப்பட்டது.
எனவே, இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிவதைக் கட்டாயமாக்க அரசு முடிவு செய்துள்ளது. அதற்காக ஹெல்மெட் அணியாதவர்களுக்கு பெட்ரோல் இல்லை என்ற கொள்கையை தீவிரமாக கடைப்பிடிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. எனவே இந்த கொள்கையை அனைத்து மாவட்டங்களும் தீவிரமாக அமல்படுத்த வேண்டும்.
இதை மாவட்ட கலெக்டர்கள் உறுதி செய்ய வேண்டும். இந்த விவகாரத்தில் மோட்டார் வாகன சட்டம் 1988-ன் கீழ் பெட்ரோல் விற்பனை நிலைய உரிமையாளர்களுக்கு அறிவுறுத்த வேண்டும். மேலும் காவல்துறை மற்றும் ஆர்டிஓக்கள் இணைந்து இந்த கொள்கை வெற்றி பெறுவதை உறுதி செய்ய வேண்டும்” என அறிவுறுத்தப்பட்டுள்ளது.