மதுரையில் கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாஸ்கரன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது..,
2024 ஆம் ஆண்டு நடைபெறக்கூடிய நாடாளுமன்ற தேர்தலில் பாசிச பாரதிய ஜனதா கட்சியை வீழ்த்துவதற்காக இந்தியா கூட்டணியை முழுமனதாக நாங்கள் ஆதரிக்கிறோம். அதற்காக கட்சி முழுமையாக செயல்படும் என்றார்.
அதேபோல் தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பில் இருக்கக்கூடிய திமுக அரசிற்கு எங்களது முழு ஆதரவு உண்டு என்றும் தொடர்ந்து தங்கள் ஆதரவை தெரிவித்து உள்ளோம் எனவும் தெரிவித்தார்.
இதே போல் ஒன்றிய அரசு பொதுத்துறை நிறுவனங்களை தனியார் லாபம் பெறும் வகையில் மிகக் குறைந்த விலையில் தனியாருக்கு விற்பனை செய்கிறது. இது கண்டிக்கத்தக்கது. மோடி தலைமையிலான அரசு இந்த செயலை தொடர்ந்து செய்து வருகிறது. தற்போது மதுரை ரயில் நிலையத்தை ஒட்டியுள்ள விளையாட்டு திடல்களை தனியாருக்கு தாரை வார்க்க மோடி அரசு திட்டம் தீட்டி உள்ளது. இதனை தடுத்து நிறுத்த வேண்டும். இதற்கு ஆரம்பத்தில் இருந்து எதிர்ப்பு தெரிவித்து குரல் கொடுத்து வரும் மதுரை பாராளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் முயற்சிக்கு எங்கள் கட்சி எப்போதும் துணை நிற்கும் என தெரிவித்தார்.