தேசிய மற்றும் உத்தரப் பிரதேச அரசியலில் தனித்துவமாகத் திகழ்ந்தவர் என்று, சமாஜ்வாதி கட்சியின் நிறுவனத் தலைவர் முலாயம் சிங் யாதவுக்கு பிரதமர் நரேந்திர மோடி புகழஞ்சலி செலுத்தியுள்ளார். இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், “முலாயம் சிங் யாதவ் தேசிய மற்றும் உத்தரப் பிரதேச அரசியலில் தனித்துவமாகத் திகழ்ந்தவர். எமர்ஜென்சி காலத்தில் அவர் ஜனநாயகத்தின் பாதுகாவலராக இருந்தார்.
பாதுகாப்பு அமைச்சராக அவர் வலுவான இந்தியாவுக்காக செயல்பட்டார். நாடாளுமன்றத்தில் அவரது தலையீடுகள் எல்லாம் தொலைநோக்கு பார்வை உடையதாக, தேச நலனை வலியுறுத்துவதாக இருந்தன. முலாயம் சிங் யாதவ் குறிப்பிடத்தகுந்த நபர். அவர் மிகவும் எளிமையான தலைவராக மக்கள் மனங்களைக் கவர்ந்தார். மக்கள் பிரச்சினைகளுக்கு செவி சாய்ப்பவராக இருந்தார். அவர் மக்களுக்கு தொண்டாற்றினார். வாழ்நாள் முழுவதும் லோக்நாயக் ஜெயப்பிரகாஷ் நாராயண் மற்றும் ராம் மனோகர் லோஹியாவின் கொள்கைகளை முன்னெடுத்துச் செல்பவராக இருந்தார்” என்று பதிவிட்டுள்ளார்.