இவ்வாண்டு இறுதி வெள்ளிக்கிழமை டிசம்பர் 30 ஆம் தேதி பல திரைப்படங்கள் வெளியாகவிருக்கின்றன இவற்றில் மூன்று படங்களை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் நிறுவனம் வெளியிடுகிறது.
ஐஸ்வர்யா ராஜேஷ் நாயகியாக நடித்துள்ள டிரைவர் ஜமுனா, எங்கேயும் எப்போதும் சரவணன் இயக்கத்தில் த்ரிஷா கதைநாயகி நடித்திருக்கும் ராங்கி, பிரபுசாலமன் இயக்கத்தில் கோவைசரளா நடித்திருக்கும் செம்பி, யுவன் இயக்கத்தில் சன்னிலியோன் நடித்துள்ள ஓ மை கோஸ்ட் ஆகிய படங்களோடு சகுந்தலாவின் காதலன், டியர் டெத் உள்ளிட்ட படங்களும் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கின்றன.ஒரேநாளில் கதாநாயகிகளை மையப்படுத்திய நான்கு படங்கள் வெளியாவது வியப்பான நிகழ்வு.அந்நான்கு படங்களில் மூன்று படங்களை உதயநிதியின் ரெட்ஜெயண்ட் நிறுவனம் வெளியிடவிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.இவற்றில் கோவைசரளா நடித்துள்ள செம்பி படத்தை மட்டும் ரெட்ஜெயண்ட் வெளியீடு என்று பெயர் போட்டு அதிகாரப்பூர்வமாக வெளியிடுகிறார்கள்.
ஐஸ்வர்யா ராஜேஷின் டிரைவர் ஜமுனா, த்ரிஷாவின் ராங்கி ஆகிய படங்களைப் பெயர் போடாமல் வெளியிடுகிறது ரெட்ஜெயண்ட் நிறுவனம். சன்னிலியோன் நடித்துள்ள ஓ மை கோஸ்ட் படம் பல விநியோகஸ்தர்களால் வெளியிடப்படுகிறது.டிரைவர் ஜமுனா படத்தை ரெட்ஜெயண்ட் நிறுவனம் வெளியிடுகிறது என்பதால் டிசம்பர் 29 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட ஐஸ்வர்யா ராஜேஷின் தி கிரேட் இண்டியன் கிச்சன் படத்தின் வெளியீடு தள்ளிப்போயிருக்கிறது.
ஒரேநாயகியின் இரண்டு படங்கள் ஒரேநாளில் வெளியாவது இரசிகர்களுக்குக் குழப்பத்தை ஏற்படுத்தும் என்பதோடு வசூலிலும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று காரணம் சொல்லி தி கிரேட் இண்டியன் கிச்சன் படத்தைத் தள்ளிவைத்துவிட்டார்கள்.இப்போது வெளியாகவிருக்கும் கதாநாயகிகளை மையப்படுத்திய நான்கு படங்களுக்கும் இன்னொரு வியப்பான ஒற்றுமையும் இருக்கிறதாம்.அது என்னவென்றால்? நான்குமே பழிவாங்கும் கதைகள் என்கிறார்கள்.