• Thu. May 7th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

சிறுமியிடம் சில்மி‌ஷம்- பெயிண்டரை அடித்து கொன்ற பெண் உள்பட 2 பேர் கைது.!

தென்காசி மாவட்டம் மேலகடையநல்லூர் வேத கோவில் தெருவை சேர்ந்தவர் கோபால்(55). இவர் பெயிண்டராக உள்ளார்.

கடையநல்லூர் தாலுகா அலுவலகத்திற்கு எதிரே உள்ள வீட்டில் நேற்று கோபால் பெயிண்ட் அடித்துக்கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த வாலிபர் ஒருவரும், அவருடைய உறவுக்கார பெண்ணும் கோபாலை வெளியே வரவழைத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

வாக்குவாதம் முற்றவே 2 பேரும் அங்கு கிடந்த பெரிய கல்லை எடுத்து கோபால் தலையில் தூக்கி போட்டனர். பின்னர் கம்பால் சரமாரி தாக்கினர். இதில் படுகாயம் அடைந்த கோபால் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். உடனே அந்த 2 பேரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதனை அங்கிருந்த சிலர் வீடியோ பதிவு செய்து சமூக வலைதளங்களில் பரப்பினர். அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

இதுகுறித்து தகவல் அறிந்த கடையநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கோபால் உடலை மீட்டு கடையநல்லூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில், 12 வயது சிறுமியின் வீட்டுக்கு கோபால் சென்றுள்ளார். அங்கு யாரும் இல்லாததை அறிந்த கோபால், சிறுமியிடம் குடிப்பதற்கு தண்ணீர் கேட்டுக்கொண்டே வீட்டுக்குள் சென்றுள்ளார். பின்னர் அந்த சிறுமியிடம் சில்மி‌ஷத்தில் ஈடுபட்டுள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து தலைமறைவான கொலையாளிகள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.