தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் உள்ள வளம் மீட்பு பூங்காவில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் தேனி மாவட்டத்தில் உள்ள 21 பேரூராட்சிகளை சேர்ந்த பேரூராட்சி மன்ற தலைவர்கள், செயல் அலுவலர்கள், துப்புரவு ஆய்வாளர் மற்றும் துப்புரவு மேற்பார்வையாளர்களுக்கான பயிற்சி நடைபெற்றது. நேற்று 3ஆம் தேதி முதல் தொடங்கிய இந்த பயிற்சி வரும் எட்டாம் தேதி வரை நடைபெறும் .
நேற்று நடைபெற்ற பயிற்சியில் கெங்குவார்பட்டி , போடி மீனாட்சிபுரம் ,பூதிப் புரம், தேவதானப்பட்டி உள்ளிட்ட பேரூராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர். பேரூராட்சி செயல் அலுவலர் சின்னச்சாமி பாண்டியன், பேரூராட்சி மன்ற தலைவர் சந்திரகலா ஆகியோர் முன்னிலையில் பயிற்சி நடைபெற்றது. அப்போது திடக்கழிவு சேகரம் செய்யும் முறை ,மேலாண்மை வரைபடம், வீடு வீடாக குப்பைகளை சேகரிக்கும் நடைமுறை, கழிவுகளை வளம் பூங்காவிற்கு எடுத்துச் செல்லுதல் மற்றும் குப்பைகளை தேர்வு செய்தல், உரங்களை விற்பனைப்படுத்துவதற்காக நடைமுறை, மக்காத குப்பைகளை தேர்வு செய்தல், உள்ளிட்டவைகளை காணொளி காட்சி மூலம் அலுவலர்களுக்கு செயல்முறை விளக்கம் காட்டப்பட்டது.
மேலும் இந்த முகாமினை பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் ராஜாராம் பார்வையிட்டு ஆலோசனை வழங்கினார் .இதுகுறித்து சுகாதார ஆய்வாளர் மணிகண்டன் கூறியதாவது திடக் கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் தமிழகத்தில் உள்ள 490 பேரூராட்சிகளில் 4 பேரூராட்சிகள் மட்டுமே சிறந்த மாதிரி பேரூராட்சிகளாக தேர்வு செய்யப்பட்டு உள்ளது. அந்த அடிப்படையில் இந்த நான்கு பேரூராட்சிகளில் ஆண்டிபட்டி பேரூராட்சி ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இந்த மாதிரி பேரூராட்சி மூலம் மற்ற பேரூராட்சிகளை சேர்ந்த அலுவலர்களுக்கு பயிற்சி முகாம் நடத்த இயக்குனர் உத்தரவின் பேரில், மாவட்ட கலெக்டர் முரளிதரன் வழிகாட்டுதலின்படி இந்த முகாம் நடைபெற்று வருவதாகவும் , திடக் கல்வி மேலாண்மை திட்டத்தின் மூலம் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும் நிலத்தடி நீர்மட்டம் உயரும் என்றும் தெரிவித்தார்.