நீலகிரியில் விபத்துக்கு உள்ளாவதற்கு முன்பாக, சுற்றுலாப் பயணிகள் மிக்-17வி5 ஹெலிகாப்டர் கடைசியாக வானத்தில் பறந்த வீடியோவை படம் பிடித்திருப்பது, தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
நேற்று(டிச. 8) காட்டேரி பகுதியில் முப்படைத் தலைமை தளபதி உள்பட உயர் அதிகாரிகளுடன் சென்ற மிக்-17வி5 என்ற ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது உலக அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர் கடைசியாக பறந்து சென்ற காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.
குன்னூர் காட்டேரி பூங்கா அருகே உள்ள ரயில்வே தண்டவாளத்தில் நின்று கொண்டிருந்த சுற்றுலா பயணிகள் எடுத்த வீடியோவில், மிக்-17வி5 ஹெலிகாப்டர் தாழ்வாக பறந்து சென்று மேக மூட்டத்தில் மறைகிறது. அடுத்த சில வினாடிகளிலே பயங்கர சத்தம் ஒன்று கேட்கிறது. அதன்பிறகு ஹெலிகாப்டரின் நிலைமை என்னவென்று தெரியவில்லை.
”என்னாச்சு ஹெலிகாப்டர் உடஞ்சிருச்சா” என ஒருவர் கேட்கிறார். அதற்கு வீடியோ எடுப்பவர் ஆமாம் என்கிறார்.
விபத்துக்கு முன்பாக எடுத்த இந்த வீடியோ தற்போது இணையதளத்தில் அனைவராலும் பகிரப்பட்டு வருகிறது.