• Tue. Apr 23rd, 2024

இன்று ஈர்ப்பு விசை பற்றி ஆய்வுகள் மேற்கொண்ட ஐசக் நியூட்டன் நினைவு தினம்

ByKalamegam Viswanathan

Mar 20, 2023

அறிவியல் புரட்சியில் முக்கியமான கணிதம், இயந்திரவியல் துறைகளிலும், ஈர்ப்பு விசை பற்றியும் பெரிதும் ஆய்வுகள் மேற்கொண்ட தத்துவஞானி ஐசக் நியூட்டன் நினைவு தினம் இன்று (மார்ச் 20, 1727).
ஐசக் நியூட்டன் (Sir Isaac Newton) டிசம்பர் 25, 1642ல் கிரிஸ்துமஸ் தினத்தன்று இங்கிலாந்தில் லிங்கன்ஷயர் கவுண்டியில், கோல்ஸ்டர்வேர்த்துக்கு அருகிலுள்ள வூல்ஸ்தோர்ப் என்னும் ஒரு சிற்றூரில் ஒரு சராசரி விவசாய குடும்பத்தில் பிறந்தார். இவர் பிறப்பதற்கு மூன்று மாதங்களுக்கு முன்னரே இவரது தந்தையார் இறந்துவிட்டார். இரண்டு ஆண்டுகள் கழிய நியூட்டனை அவரது பாட்டியின் கவனிப்பில் விட்டுவிட்டு, தாயாரும் தனது புதிய கணவருடன் வாழச் சென்றுவிட்டார். இவரது குழந்தைப் பருவம் மகிழ்ச்சியற்றதாகவும், நிம்மதியற்றதாகவும் இருந்தது. தனது 12வது வயதில் பள்ளியில் சேர்ந்தார். இவர் பள்ளி படிப்பில் மிகவும் பின்தங்கி சாதாரண மாணவராக இருந்தார். பள்ளியில் பாடம் படிப்பதற்கு பதிலாக படம் வரைதல், பட்டம் செய்தல் போன்ற செயல்களில் ஆர்வமாக இருந்தார். ஆனால் ஒருமுறை தன்னைக் கேலி செய்த வயதில் தன்னைவிட பெரிய சிறுவனை நையப் புடைத்த பின் தன்னம்பிக்கை அதிகரித்து நன்றாக படிக்கத் தொடங்கினார். சிறுவயதிலிருந்தே நியூட்டனுக்கு அறிவியலில் ஈடுபாடு இருந்தது.
தண்ணீரிலும் வேலை செய்யும் கடிகாரத்தை அவர் சிறுவயதிலேயே உருவாக்கினார். அவருக்குப் பதினான்கு வயதானபோது குடும்ப ஏழ்மையின் காரணமாகப் பள்ளிப் படிப்பைக் கைவிட வேண்டிய நிலை ஏற்பட்டது. நியூட்டனின் கல்வி ஆசையை அறிந்துகொண்ட அவரது மாமன் 1661ல், அவரைப் இங்கிலாந்தில் உள்ள புகழ்பெற்ற கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் சேர்த்தார். அங்கு கணிதம், இயற்பியல் ஆகிய பாடங்களில் தனித் திறமை பெற்று சிறந்த மாணவனாக விளங்கினார். பல்கலைக் கழகத்தில் படிக்கும்போது கணித சூத்திரங்களையும், ஈருறுப்பு தொடர் தேற்றங்களையும் கண்டுபிடித்தார். இயற்கையை அறிந்து கொள்ள ஆற்றல் வாய்ந்த கணித முறையான வகையீட்டு எண் கணிதம், தொகையீட்டு எண் கணிதம் ஆகியவற்றைக் கண்டுபிடித்தார். இந்தக் கண்டுபிடிப்பு இயற்பியலில் கணித முறையை பயன்படுத்த உதவியது. அக்காலத்தில் கல்லூரியின் கற்பித்தல், அரிஸ்ட்டாட்டிலைப் பின்பற்றியதாகவே இருந்தது. ஆனால் நியூட்டன், டெஸ்கார்ட்டஸ், கலிலியோ, கோப்பர்னிக்கஸ் மற்றும் கெப்ளர் போன்ற அக்காலத்து நவீன தத்துவ வாதிகளுடைய கருக்களையும் கற்கவிரும்பினார்.
மிகச்சிறப்பாகக் கற்றுத் தேர்ந்து 1665ம் ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பை முடித்தார். இவர் பட்டம் பெற்றதும், பெருங்கொள்ளைநோய் காரணமாக பல்கலைக்கழகம் மூடப்பட்டது. அடுத்த இரண்டுவருடங்கள் வீட்டிலிருந்தபடியே, நுண்கணிதம், ஒளியியல், ஈர்ப்பு என்பவை பற்றி ஆராய்ந்தார். அவர் பட்டம் பெற்ற இரண்டு ஆண்டுகளில் அவரது அறிவியல் மூளை அபரிமிதமாக செயல்படத் தொடங்கியது. நவீன கணிதத்தின் பல்வேறு கூறுகளை அவர் கண்டுபிடித்தார். Generalized binomial theorem, infinitesimal calculus போன்ற நவீன கணிதத்தின் பிரிவுகள் அவர் கண்டுபிடித்தவைதான். வளைந்த பொருள்களின் பரப்பையும் கெட்டியான பொருள்களின் கொள்ளளவையும் கண்டுபிடிக்கும் முறைகள் அவர் வகுத்துத் தந்தவையே. இவர் தனது ஆராய்ச்சிகளை வானவியல் பக்கம் 1664ம் ஆண்டில் திருப்பினார். அதாவது வானில் உள்ள கிரகங்கள் பற்றிய ஆராய்ச்சிகளில் ஈடுபடத் தொடங்கினார். சந்திரனைச் சுற்றிலும் உள்ள மெல்லிய கீற்றுகள் எவ்வாறு உண்டானது என்பது பற்றித் தீவிரமாக சிந்திக்கலானார். இந்த ஒளிக்கற்றைக்கும், வானவில்லில் ஒளிரும் ஒளிச் கற்றைகளுக்குமிடையே உள்ள வித்தியாசத்தை சோதனைகள் மூலம் ஆராய்ந்தார். இவரது கண்டு பிடிப்புகளைக் கண்டு பலரும் வியந்து பாராட்டினர். இவரது ஆராயும் அறிவைக் கண்ட அதிகாரிகள் இவருக்கு உபகார சம்பளம் அளிக்க முன்வந்தனர். இவர் கிரகங்களைப் பற்றி ஆராய்ந்த கெப்ளரின் வாதங்களின் படியே அவரது கருத்துக்களை முன் வைத்து அதில் வெற்றியும் கண்டார். ஆனால், நியூட்டனுக்கு முன்பே கிரகங்களின் நிலை பற்றி பல விஞ்ஞானிகள் ஆராய்ச்சிகளின் முடிவுகளை வெளியிட்டனர். அவர்களின் ஆராய்ச்சிகளைப் பின் பற்றிய நியூட்டனும் தன் ஆராய்ச்சிகளைத் தொடர்ந்தார்.


பூமியின் புவி ஈர்ப்புத் தன்மையைப் பற்றி முதன் முதலில் கண்டறிந்தவர் நியூட்டன் என்றே பலர் எண்ணினாலும், அதற்கு முன்பாகவே, பலர் பூமியின் தன்மை இழுப்பதாலேயே பொருள்கள் கீழே விழுகின்றன என்பதைக் கண்டறிந்தனர். இருப்பினும், கிரகங்களின் இயக்கத்துக்கு இந்த புவி ஈர்ப்பு விசையே காரணம் என்றும், கிரகங்கள் சூரியனிடமிருந்து எவ்வளவு தூரமுள்ளனவோ அவ்வளவுக்கு மாறாக வேகம் சலன கதியில் வித்தியாசப் படுகிறது என்றும் முதன் முதலாகக் கண்டறிந்தவர் ஐசக் நியூட்டனே. நியூட்டன் பற்றிய குறிப்புகளை அவரது நண்பர் வால்டோ எழுதி வைக்கவில்லையென்றால், நியூட்டனின் ஆப்பிள் பழச் சம்பவம் நமக்குத் தெரியாமலே போயிருக்கும். ஒருநாள் நியூட்டன் தன் தோட்டத்தில் உட்கார்ந்து படித்துக் கொண்டிருந்தார். அப்போது அங்குள்ள ஆப்பிள் மரத்திலிருந்து ஆப்பிள் பழம் ஒன்று கீழே விழுந்தது. அதைப் பார்த்த நியூட்டனின் சிந்தனை ஆப்பிள் மரத்தின் மீது சென்றது. அப்போது அவர் ஆப்பிள் மரத்திலிருந்து விழுந்த ஆப்பிள் நேராக பூமியில் வந்து விழக் காரணம் என்ன? அந்தக் கனி மரத்தின் மீது ஏன் செல்லவில்லை என்று சிந்தித்தார். ஆக, பூமி சாதாரண பொருட்களை மட்டுமின்றி கிரகங்களையும் தன் வசம் இழுக்கிறது என்பதை உணர்ந்தார். அன்று அவர் சிந்தையைத் தூண்டச் செய்யக் காரணமாயிருந்த சம்பவமே அவர் கண்டுபிடித்த இயக்கம் மற்றும் புவி ஈர்ப்பு விதிக்குக் கட்டுப்பட்ட கிரகச் சுழற்சி நியதிக்கும் காரணமாக அமைந்தது.
சூரியனைச் சுற்றிய பாதையில் கோளின் இயக்கத்துக்குக் காரணமான விசை மரத்திலிருந்து ஆப்பிள் கனியை விழச் செய்யும் என்ற முடிவிற்கு வந்தார். இவர் தம் 24வது வயதில் 1666ம் ஆண்டில் ஈர்ப்பியலைப் பற்றிய விதியை வெளியிட்டு மிகப்பெரும் புகழ் பெற்றார். 1667 ஆம் ஆண்டு தனது 25-ஆவது வயதில் நியூட்டன் டிரினிடி கல்லூரியில் இயற்பியல் பேராசிரியராக நியமிக்கப்பட்டார். டிரினிடி கல்லூரியில் அவருக்கு கெளரவ பொறுப்பு வழங்கப்பட்டது. இவருக்காக இவரது நண்பர் டாக்டர் பாரோ என்பவர் தன் பதவியை விட்டுக் கொடுத்தார். அப்போது கணித சம்பந்தமான ஒரு விவாதம் எழவே, நியூட்டன் தான் ஏற்கனவே எழுதி வைத்த குறிப்புகளைக் கண்ட டாக்டர் பாரோ பெரிதும் வியப்படைந்தார். அதில், கலிலியோ பாதியிலேயே விட்ட அரும் பெரும் விஷயங்களைத் தெளிவாக விளக்கியிருந்தார். கிரகங்களின் தொலைவிற்கேற்ப, தொலைவின் மடங்குகள் மாறுபட்டு, அந்தச் சக்தியானது அவற்றை எப்படி இழுக்கிறது என்ற ஆராய்ச்சியிலேயே நியூட்டன் இரவும், பகலும் தன் பொழுதைக் கழித்தார். இந்த ஆராய்ச்சியை அவர் லிங்கன் ஷைரில் நடத்திக் கொண்டிருந்தார். அந்த இடம் அசவுகரியமாக இருந்தபடியால் அவரால் ஆராய்ச்சியைத் தொடர்ந்து நடத்த முடியவில்லை. பூமியின் உருவத்தைப் பற்றியும், அதன் சுற்றளவை பற்றியும் தெரிந்து கொண்ட அவர், கிரகங்களைப் பற்றியும் கணக்கிட்டுக் கொண்டார். இரண்டு வருட காலமாக வேறு எந்த வேலையிலும் ஈடுபடாமல் இருந்தார்.


“சிந்திப்பதில் பொறுமையும், செயலில் விடா முயற்சியுமே என் வெற்றிக்கு முக்கிய காரணங்கள். இதைத் தவிர எனக்கு வேறு எந்தச் சிந்தனையுமே கிடையாது” என்று அவர் குறிப்பிடுகிறார். கணித சம்பந்தமான மற்றும் டெலஸ்கோப், பூமியின் புவிஈர்ப்பு விசை, கோள்களைப் பற்றி, பூமியின் உருவம், கன அளவு போன்ற விதிகள், சூத்திரங்கள் என்று எல்லாவற்றையும் உலகிற்கு உணர்த்திய நியூட்டன், அறிவியல் உலகில் மிகப் பெரும்சாதனையை நிகழ்த்திக் காட்டினார். ஒரு நிலையான பொருளை நகர்த்துவதற்கு, புற விசை இன்றியமையாதது. ஒரு பொருளின் இயக்கத்தை மாற்ற, சக்தி என்பது மிக முக்கியம். வேறு எந்த சக்தியும் இல்லாத நிலையில் இயக்கத்தோடு கூடிய ஒரு பொருள் அதே வேகத்தோடு, அதே திசையில் நேராகச் சென்று கொண்டிருக்கும் என்பதே நியூட்டனின் முதல் விதியாகும். ஒரு பொருள் தன் நிலையிலிருந்து மாறும்போது, அந்தச் சக்தியினுடைய அளவுக்கு ஏற்ப அதே திசையில் அந்தப் பொருளும் வேகத்திலோ, திசையிலோ மாறும் என்பது இரண்டாவது விதியாகும்.
ஒவ்வொரு வினைக்கும், அதற்கு எதிர்த் திசையிலிருந்து சமமான எதிர் வினை நிகழும். ஒன்றுக்கொன்று மாறாக இயங்குவதாகப் புலப்படும் இருவகைக் சக்திகளும் சம அளவாய் நின்று பொருளின் போக்கை நிர்ணயிக்கும். ஒரு சக்தி தனித்து அமையாதாகையால் எப்போதும், அது இரு திறப்பட்டே அமையும் என்பதை மூன்றாவது விதி விளக்குகிறது. ஒரு வகைச் சக்தியால் ஒரு பொருளை நாம் தள்ளும்போது அந்தச் சக்திக்கு எதிராக இன்னொரு சக்தி அதில் அமைந்து நமது சக்திக்குத் தடையை உண்டாக்குகிறது. 1687ல் ஈர்ப்பு சம்பந்தமான விளக்கங்களை உள்ளடக்கிய, Philosophiae Naturalis Principia Mathematica என்னும் நூலை வெளியிட்டார். இவருடைய இயக்க விதிகள் மூலம், மரபார்ந்த விசையியல் (classical mechanics) என்னும் துறைக்கு வித்திட்டார். கோட்பிறைட் வில்ஹெல்ம் லீப்னிஸ் என்பவருடன் சேர்ந்து, வகையீட்டு நுண்கணிதத் துறையின் உருவாக்கத்தில் பங்கு கொண்டார். நியூட்டனின் பிரின்சிப்பியாவிலேயே, பின்வந்த மூன்று நூற்றாண்டுகளில் பௌதீக அண்டம் தொடர்பான அறிவியலாளரின் நோக்கில் ஆதிக்கம் செலுத்திய, இயக்க விதிகள், பொது ஈர்ப்பு ஆகியவை உருவாக்கம் பெற்றன. இது புவியில் பொருட்களின் இயக்கங்களையும், அண்டவெளியில் உள்ள கோள்கள் முதலிய பொருட்களின் இயக்கங்களையும் ஒரே கோட்பாடுகளின் அடிப்படையில் விபரிக்கலாம் என விளக்கியது.


பட்டகம் (Prism) எனப்படும் முக்கோணத்தில் ஒளி விழும்போது ஏற்படும் விளைவுகளை அவர் கண்டறிந்தார். ஒரு பட்டகத்தின் (prism) ஊடே கதிரவனின் ஒளிக்கதிர் செல்லும்போது அது ஏழு வண்ணங்களாகப் பிரிவதைச் செய்முறையில் விளக்கினார். மேலும், பல வண்ணங்களைக் கொண்ட நியூட்டன் தகட்டைச் (Newton’s disc) சுழற்றும்போது அது வெண்மை நிறம் கொண்டதாக மாறுவதையும் செய்து காட்டினார். வெண்ணிற ஒளி, பல நிற ஒளிகளின் சேர்க்கையென முதலில் விளக்கியவரும் இவரே. வண்ணங்களைப் பற்றி ஆராய்ச்சி செய்ய அவர் ஒரு கண்ணை மூடிக்கொண்டு மறு கண்ணால் சூரியனை பார்த்துக்கொண்டே இருந்தார். திடீரென்று வண்ணங்கள் மாறத்தொடங்கின. அதன் விளைவாக நியூட்டனுக்கு அந்த கண்ணில் பாதிப்பு ஏற்பட்டது. பல நாட்கள் இருட்டறையில் இருந்து கண்களின் முன் மிதந்த புள்ளிகளை அகற்ற வேண்டியிருந்தது. ஒளியின் இமிசன் கோட்பாடு நியூட்டன் வகுத்து தந்ததுதான். வெகுதொலைவில் உள்ள ஓர் ஒளிரும் பொருளிலிருந்து வெளியாகும் துகள்கள் பரவெளியில் வினாடிக்கு நூற்றி தொன்னூராயிரம் மைல் வேகத்தில் விரைந்து வருவதுதான் ஒளியாக நமக்குத் தெரிகிறது என்பதுதான் அந்தக்கோட்பாடு.
ஒளி, துணிக்கைகளால் ஆனது என்ற வாதங்களுக்காகவும் இவர் குறிப்பிடத்தக்கவராக இருக்கிறார். அலை-துணிக்கை இருமைத்தன்மை இரண்டு துணிக்கைளுக்கிடையிலான ஈர்ப்பு விசையானது அவற்றின் திணிவுகளுக்கு நேர்விகிதசமனெனவும், அவற்றுக்கிடையிலான துாரத்துக்கு நேர்மாறுவிகிதசமனெனவும் கருத்தறிவித்தார். ஒளியின் தன்மைப் பற்றி ஆழமாக ஆராய்ந்ததோடு தொலைநோக்கிகளை உருவாக்குவதிலும் கவனம் செலுத்தினார். ஆறு அங்குல நீளமும், ஒரு அங்குல சுற்றளவும் கொண்ட தூரதிருஷ்டிக் கண்ணாடி ஒன்றையும் செய்தார். ஓராண்டில் அவர் ஓர் தொலைநோக்கியையும் உருவாக்கினார். அதன்மூலம் ஜூபிடர் கோலின் நிலவுகளை அவரால் பார்க்க முடிந்தது. இன்றைய நவீன தொலைநோக்கிகள் நியூட்டனின் அந்த முதல் தொலைநோக்கியின் அடிப்படையில்தான் அமைந்திருக்கின்றன. அவர் கண்டுபிடித்த அக்கண்ணாடி லண்டனில் உள்ள ராயல் சொசைட்டியில் இன்றும் உள்ளது.
டிரினிடி கல்லூரியில் இவர் பணியாற்றிக் கொண்டிருந்தபோது, அவருக்கு வயது 51. அவர் தனது குறிப்புகள் அத்தனையையும் புத்தகமாக வெளியிடலாம் என்ற நோக்கில் அதையெல்லாம் மேஜை மீது வைத்திருந்தார். அப்போது அந்தக் குறிப்புகளை எலியொன்று கடித்து நாசமாக்குவதைப் பார்த்து நியூட்டனின் நாய், எலியுடன் போராடியது. அப்போது அதனருகில் எரிந்து கொண்டிருந்த மெழுகுவர்த்தி அக்குறிப்பின் மீது விழுந்து அத்தனையும் எரிந்து சாம்பலாகிவிட்டது. கோவிலுக்குச் சென்று திரும்பிய நியூட்டன் நாயின் மீது எவ்வித கோபமும் கொள்ளாமல், “உன்னால் எவ்வித செயல் நடந்துவிட்டது என்று பார்த்தாயா?’ என்று கேட்டார். வாழ்நாளெல்லாம் கஷ்டப்பட்டு சேகரித்து வைத்த குறிப்புகள் முற்றிலும் அழிந்துவிட்டதைக் கண்ட நியூட்டனின் மனம் இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டது. நியூட்டன் அறிவுச்செல்வத்தை சேர்த்து வைத்திருப்பதை உணர்ந்த அவரது நண்பர் ஹேய்லி அவற்றையெல்லாம் புத்தமாக வெளியிட நியூட்டனுக்கு ஊக்கமூட்டினார். அதன்பலனாக 1687 ஆம் ஆண்டு “Mathematical Principles of Natural Philosophy” என்ற புத்தகம் வெளியானது. “Principia” என்றும் அழைக்கப்பட்ட அந்த புத்தகம்தான் இதுவரை வெளியிடப்பட்டிருக்கும் அறிவியல் நூல்களிலேயே மிகச்சிறந்ததாகக் கருதப்படுகிறது.
கேம்ப்ரிட்ஜில் 1705ம் ஆண்டு நடந்த சிறப்பு விழாவில் நியூட்டனுக்கு, அரசி அன்னி, “சர்’ எனும் பட்டத்தை வழங்கி கவுரவித்தார். ஐசக் நியூட்டன் இயற்பியல் துறையில் மிகப்பெரிய சாதனை புரிந்திருந்தபோதும் தம் சாதனையைப்பற்றி பின்வருமாறு கூறுகிறார். “நான் இவ்வுலகிற்கு எவ்வாறிருப்பினும் என்னில் பொருத்தமட்டில் நானொரு கடற்கரையில் விளையாடிக்கொண்டிருக்கும் சிறுவன், மென்மையான கூழாங்கல்லையும் அழகிய சங்கையும் கண்டுள்ளேன். ஆனால் விரிந்து பரந்துள்ள பெருங்கடலோ என் கண்முன்னே காணப்படாமல் உள்ளது.” ராயல் சங்கத்தின் கூட்டத்தில் தலைமை வகிக்க லண்டன் சென்ற நியூட்டன், வீட்டிற்குத் திரும்பி வருகையிலேயே உடல் நலமின்றி திரும்பி வந்தார். அறிவியல் புரட்சியில் முக்கியமான ஆய்வுகள் மேற்கொண்ட தத்துவஞானி ஐசக் நியூட்டன் மார்ச் 20, 1727ல் தனது 85வது அகவையில் இங்கிலாந்தில் இவ்வுலகை விட்டு மறைந்தார். லண்டனில் புகழ்பெற்ற “Westminster Abbey”-யில் அடக்கம் செய்யப்பட்டார். மனித குலத்தின் மிகச் சிறந்த விலை மதிப்பில்லா மாணிக்கம் (The Best and Invaluable Gem of Mankind) என்று அவர் கல்லறையில் பொறிக்கப்பட்டது. நியூட்டனுக்கு பலர் அஞ்சலி செலுத்தினாலும் போப் எழுதிய அஞ்சலி மிக ஆழமானது. இந்த வாசகம் நியூட்டன் பிறந்த அறையில் இன்றும் பொறிக்கப்பட்டிருக்கிறது! “இயற்கையும் அதன் விதிகளும் இருளில் கிடந்தன, கடவுள்… நியூட்டன் பிறக்கட்டும் என்றார் ஒளி பிறந்தது”.
Source By: Wikipedia
தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.

Related Post

SK23 படக்குழுவினருடன் பிறந்த நாள் கொண்டாடிய நடிகர் சிவகார்த்திகேயன்
delhi india அரசியல் அரியலூர் அழகு குறிப்பு ஆன்மீகம் இந்த நாள் இராணிப்பேட்டை இராமநாதபுரம் இலக்கியம் இன்றைய ராசி பலன்கள் ஈரோடு உடனடி நியூஸ் அப்டேட் உலகம் கடலூர் கரூர் கல்வி கவிதைகள் கள்ளக்குறிச்சி கன்னியாகுமரி காஞ்சிபுரம் கிருஷ்ணகிரி கோயம்புத்தூர் சமையல் குறிப்பு சிவகங்கை சினிமா சினிமா கேலரி செங்கல்பட்டு சென்னை சேலம் தஞ்சாவூர் தமிழகம் தருமபுரி திண்டுக்கல் திருச்சிராப்பள்ளி திருநெல்வேலி திருப்பத்தூர் திருப்பூர் திருவண்ணாமலை திருவள்ளூர் திருவாரூர் தினம் ஒரு திருக்குறள் தினம் ஒரு விவசாயம் தூத்துக்குடி தெரிந்து கொள்வோம் தென்காசி தொழில்நுட்பம் தேசிய செய்திகள் தேனி நாகப்பட்டினம் நாமக்கல் நீலகிரி படித்ததில் பிடித்தது புகைப்படங்கள் புதுக்கோட்டை பெரம்பலூர் பொது அறிவு – வினாவிடை மக்கள் கருத்து மதுரை மயிலாடுதுறை மருத்துவம் மாவட்டம் லைப்ஸ்டைல் வணிகம் வார இதழ் வானிலை விருதுநகர் விழுப்புரம் விளையாட்டு வீடியோ வேலூர் வேலைவாய்ப்பு செய்திகள் ஜோதிடம் - ராசிபலன்
நீங்க ரெடின்னா நாங்க ரெடி?
delhi india அரசியல் அரியலூர் அழகு குறிப்பு ஆன்மீகம் இந்த நாள் இராணிப்பேட்டை இராமநாதபுரம் இன்றைய ராசி பலன்கள் ஈரோடு உடனடி நியூஸ் அப்டேட் உலகம் கடலூர் கரூர் கல்வி கவிதைகள் கள்ளக்குறிச்சி கன்னியாகுமரி காஞ்சிபுரம் கிருஷ்ணகிரி கோயம்புத்தூர் சமையல் குறிப்பு சிவகங்கை சினிமா சினிமா கேலரி செங்கல்பட்டு சென்னை சேலம் தஞ்சாவூர் தமிழகம் தருமபுரி திண்டுக்கல் திருச்சிராப்பள்ளி திருநெல்வேலி திருப்பத்தூர் திருப்பூர் திருவண்ணாமலை திருவள்ளூர் திருவாரூர் தினம் ஒரு திருக்குறள் தினம் ஒரு விவசாயம் தூத்துக்குடி தெரிந்து கொள்வோம் தென்காசி தொழில்நுட்பம் தேசிய செய்திகள் தேனி நாகப்பட்டினம் நாமக்கல் நீலகிரி படித்ததில் பிடித்தது புகைப்படங்கள் புதுக்கோட்டை பெரம்பலூர் பொது அறிவு – வினாவிடை மக்கள் கருத்து மதுரை மயிலாடுதுறை மருத்துவம் மாவட்டம் லைப்ஸ்டைல் வணிகம் வார இதழ் வானிலை விருதுநகர் விழுப்புரம் விளையாட்டு வீடியோ வேலூர் வேலைவாய்ப்பு செய்திகள் ஜோதிடம் - ராசிபலன்
நீங்க ரெடின்னா.., நாங்க ரெடி?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *