• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

இன்று டாப்ளர் விளைவைக் கண்டறிந்த கிறிஸ்டியன் டாப்ளர் நினைவு நாள்

ByKalamegam Viswanathan

Mar 17, 2023

ஒலியைப் பற்றிய டாப்ளர் விளைவைக் கண்டறிந்த, ஆஸ்திரிய நாட்டைச் சேர்ந்த கணிதம் மற்றும் இயற்பியல் அறிஞர் கிறிஸ்டியன் டாப்ளர் நினைவு நாள் இன்று (மார்ச் 17, 1853).
கிறிஸ்டியன் ஆந்திரேயாசு டாப்ளர் (Christian Andreas Doppler) நவம்பர் 29, 1803ல் ஆஸ்திரியாவின் சால்ஸ்புர்க் நகரத்தில் பிறந்தவர். இவரது தந்தை ஒரு கல் தொழிலாளி ஆவார். இயற்கையிலேயே உடலால் மிகவும் பலகீனமாக இருந்தமையால் இவர் தன் தந்தையின் தொழிலை மேற்கொள்ளவில்லை. இவர் தனது உயர்கல்வியை முடித்ததும் வியன்னா மற்றும் சல்ஸ்பெர்கில் வானியல் மற்றும் கணிதத்தைக் கற்று முடித்தார். பிராகா பல்தொழில்நுட்பக் கல்லூரியில் (தற்போதைய செக் தொழிநுட்பப் பல்கலைக்கழகம்) பணியாற்றினார்.

டாப்ளர் தனது 39 ஆம் வயதில் இரட்டை விண்மீன்களிலிருந்து வரும் வண்ண ஒளியைப் பற்றிய ஆய்வினை வெளியிட்டார். இது அவரை 1845 -ல் டாப்ளர் விளைவைக் கண்டறியத் தூண்டுகோலாய் இருந்தது. டாப்ளர் செக்கோசுலவாக்கியாவில் விரிவுரையாளராகப் பணியாற்றியபோது கணிதம், இயற்பியல், இயந்திரவியல் மற்றும் வானியல் சார்ந்த 50 -க்கும் மேற்பட்ட கட்டுரைகளை வெளியிட்டார். 1848-ல் வியன்னாவுக்கு குடிபெயர்ந்த டாப்ளர் வியன்னா பல்கலைகழகத்தில் இயற்பியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவராக அமர்த்தப்பட்டார். மரபியலின் தந்தை எனப்படும் கிரிகொர் மென்டல் வியன்னாவில் 1851 முதல் 1853 இவரது மாணவராக இருந்தார்.
டாப்ளரின் முழுப்பெயரில் பல குழப்பங்கள் நிலவுகின்றன. டாப்ளர் தனது பெயரை கிறிஸ்டியன் டாப்ளர் எனக் கூறிக்கொண்டார். அவருடைய பிறப்பு ஆவணங்கள் அவரை கிறிஸ்டியன் ஆண்ட்ரியாஸ் டாப்ளர் எனக் குறிப்பிடுகின்றன. வானியல் அறிஞரான ஜூலியஸ் சைனர் இவர் பெயரை ஜோகான் கிறிஸ்டியன் டாப்ளர் எனத் தவறுதலாக அறிமுகம் செய்தார். அன்றிலிருந்து இவருடைய பெயரைப் பலர் அவ்வாறே தொடருகின்றனர்.


ஒலி மூலத்திற்கும் கேட்குநருக்கும் இடையில் ஒரு சார்பியக்கம் உள்ள பொது ஒலிகள் அதிர்வெண்ணில் தோற்ற மாற்றம் எற்படும் நிகழ்வு டாப்ளர் விளைவு எனப்படும். ரேடார் (Radio Detection And Ranging) – டாப்ளர் விளைவு தத்துவத்தின் அடிப்படையில் செயல்படும் கருவியாகும். இதனைக் கொண்டு நீர்மூழ்கிக்கப்பல் மற்றும் வானூர்திகளின் இயக்கம் மற்றும் திசைவேகம் கண்டறியப்படுகிறது.
நம் வண்டியின் ஸ்பீடோ மீட்டரைப் பார்க்காமலேயே டிராபிக் போலீசார் ஓவர் ஸ்பீடு என்று அபராதம் கட்டச் சொல்வது எப்படி? நாம் போகும் வேகத்தை தூரத்திலிருந்தே அவர்கள் எப்படிக் கணிக்கின்றனர்? இந்த இடத்தில்தான் டாப்ளர் எஃபெக்ட் என்ற ஒப்பற்ற அறிவியல் அடிப்படை உதவுகிறது. போக்குவரத்து கட்டுப்பாட்டு வாகனத்திலிருந்து, வேகமாக செல்லும் வாகனத்தை நோக்கி மைக்ரோ அலைகள் அனுப்பப்படுகின்றன. இயங்கும் வாகனத்திலிருந்து எதிரொலிப்பு அலைகள் கட்டுப்பாட்டு வாகனத்திலிள்ள பகுப்பான் உதவியினால் உணரப்படுகின்றது அதிர்வெண்ணில் ஏற்படும் இடப்பெயர்ச்சியின் மூலம் வாகனத்தின் வேகம் கணக்கிடப்படுகிறது.
வானூர்தி நிலையத்தில் உள்ள ரேடாரின் மூலம் பெறப்படுகின்ற டாப்ளர் இடப்பெயர்ச்சியின் உதவியுடன் வானூர்தி உள்ள உயரம், வேகம், நெருங்கும் வானூர்தியின் தொலைவு போன்றவை கணக்கிடப்படுகின்றன. வௌவால்கள் மீயொலியை உருவாக்கும் பண்பு கொண்டவை. இரை மற்றும் தடைப் பொருள்களில் பட்டு எதிரொலிப்பு அடையும் மீயொலிகளில் ஏற்படும் டாப்ளர் இடப்பெயர்ச்சியின் மூலம் வௌவால்கள் இரையின் தொலைவு மற்றும் இயக்கத்தை அறிந்துகொள்கின்றன.
இந்த ஒப்பற்ற கண்டுபிடிப்பு மட்டுமின்றி, கணிதம், இயற்பியல், இயந்திரவியல், வானியல் சார்ந்த 50க்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதி வெளியிட்ட டாப்ளர், வியன்னா பல்கலைக்கழகத்தின் இயற்பியல் ஆய்வு நிறுவனத் தலைவராகவும் உயர்ந்தார். சுவாசக் கோளாறால் பாதிக்கப்பட்ட டாப்ளர், மார்ச் 17,1853ல் தேதி இத்தாலியின் வெனிஸ் நகரில் தனது 49வது வயதில் மரணமடைந்தார்.
Source By: Wikipedia
தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.