• Tue. Mar 3rd, 2026
WhatsAppImage2026-02-27at0552154
previous arrow
next arrow
Read Now

திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா டி.ஜி.பி. சைலேந்திர பாபு ஆய்வு

ByA.Tamilselvan

Dec 1, 2022

திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா முன்னேற்பாடுகளை டி.ஜி.பி. சைலேந்திர பாபு நேரில் சென்று ஆய்வு செய்தார்.
திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா கடந்த நவ.27ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.தீபத்திரு விழா தற்போது சிறப்பாக நடைபெற்று வருகிறது.டிசம்பர் 3-ம் தேதி மகா ரதம், 6-ம் தேதி காலை கருவறையில் பரணி தீபம், அன்று மாலை 2,688 அடி மலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்பட இருக்கிறது. 7-ம் தேதி தொடங்கி 9-ம் தேதி வரையிலும் தெப்பல் திருவிழா நடைபெறும். 7-ம் தேதி காலை 8.14 மணி முதல் மறுநாள் காலை 9.22 வரை பௌர்ணமி கிரிவலம் செல்லலாம்.விழாவினை முன்னிட்டு பக்தர்களுக்கு போக்குவரத்து வசதிகள்,மருத்துவ வசதிகள்,பாதுகாப்பு ஏற்பாடுகள்,அடிப்படை வசதிகள் உள்ளிட்ட பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
குறிப்பாக பாதுகாப்புப் பணியில் 12,097 காவலர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். 26 தீயணைப்பு வாகனங்கள், 600 தீயணைப்பு வீரர்கள், 150 வனத்துறை வீரர்களும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். திருக்கோயில் வளாகத்திற்குள் 169 கண்காணிப்பு கேமராக்கள் நிறுவப்பட்டுள்ளன. கிரிவலப்பாதையில் 97 கண்காணிப்பு கேமராக்கள் நிறுவப்பட்டுள்ளன. 57 இடங்களில் காவல் கண்காணிப்புக் கோபுரங்கள், அதாவது வாட்ச் டவர் அமைக்கப்பட்டுவருகிறது. 35 இடங்களில் ‘மே ஐ ஹெல்ப் யூ’ என்ற பெயரில் பூத்கள் அமைக்கப்படும். 4 கட்டுப்பாட்டு அறைகளும் அமைக்கப்படுகிறது. குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிசெய்ய அவர்களின் மணிக்கட்டுகளில் பட்டை கட்டப்படுவது உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா முன்னேற்பாடுகளை பார்வையிடச் சென்ற டி.ஜி.பி. சைலேந்திர பாபு, விழுப்புரம் மாவட்டம் ஒலக்கூர், ரோசனை காவல் நிலையங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் சரியாக செய்யப்பட்டுள்ளனவா என ஆய்வு செய்தார்.