புதுக்கோட்டை மாநகரின் மையப் பகுதியில் உள்ள தெற்கு ராஜ வீதியில் சிவகாமி ஜுவல்லர்ஸ் என்ற பெயரில் நகைக்கடை வைத்து இருப்பவர் கணேசன். கடந்த 19ஆம் தேதி இரவு இவருக்கு வேண்டாதவர்கள் இவரது நகைக்கடையின் இரும்பு கடையை இரும்பு பட்டை வைத்து வெல்டிங் செய்து திறக்க விடாமல் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து நகைக்கடை முதலாளி கணேசன் கூறுகையில்… 40 ஆண்டு காலமாக அந்த இடத்தில் தான் கடை வைத்திருக்கிறேன். அது வாடகைக் கட்டடமாகும். அந்தக் கட்டடத்தின் உரிமையாளரான ஆதிரா பீவி என்ற அம்மையார் தான் எனக்கு அந்த கடையை வாடகைக்குக் கொடுத்திருந்தார். நான் உரிய வாடகை முறையாக செலுத்தி வந்திருக்கிறேன். அதற்கான அனைத்து ஆவணங்களும் என்னிடம் உள்ளது.

அண்மைக்காலமாக அந்தக் கடையைக் காலி செய்யச் சொல்லி சிலர் மிரட்டி வந்தார்கள். தாங்கள் விலைக்கு வாங்கி இருப்பதாகவும் அதனால் தொழில் செய்ய விடமாட்டோம் என்றும் மிரட்டினார்கள். ஆனால் எதற்கும் நான் மசியவில்லை. இதற்கிடையில் நான் வாடகையை முறையாக கட்டிடத்தின் உரிமையாளருக்கு செலுத்தி வந்த நிலையில் அவர்கள் நகராட்சிக்கு உரிய வரி செலுத்தவில்லை என்று கூறி கடந்த 2020 ஆம் ஆண்டு நகராட்சி நிர்வாகம் எனது கடைக்கு முன்னாள் குப்பைத் தொட்டியை கொண்டார்ந்து வைத்ததோடு கடையை இடிக்க முற்பட்டார்கள். அதனால் நகராட்சி நிர்வாகத்தின் மீதும் கட்டடத்தின் உரிமையாளர் மீதும் வழக்கு தொடுக்கப்பட்டு அதன் நிலுவையில் இருக்கிறது. அவர்கள் நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்திருக்கிறார்கள்.

இந்த நிலையில் தான் கடந்த 19ஆம் தேதி இரவு முகமது அலி என்பவரும் முகமது இஸ்மாயில் என்பவரும் அவரது மகன்களுடன் வந்து கூலிப்படையினரையும் வைத்துக் கொண்டு இரவு நேரத்தில் கடையின் வெளிப்புறம் இருந்த கண்காட்சி கேமராவை உடைத்து, வயரையும் துண்டித்து, இரும்பு கதவின் மேல் இரண்டு பட்டாக்களை வைத்து வெல்டிங் செய்து பூட்டையும் அத்துடன் இணைத்து வெல்டிங் செய்து விட்டார்கள். மறுநாள் பகலில் நான் வந்து பார்த்தபோது கடைக்கு முன்னால் நாற்காலியில் அமர்ந்து கொண்டு வேலை நான் சொல்லி இருக்கும் அனைவரும் என்னை மிரட்டி கொலை செய்ததாகவும் திட்டினார்கள். இது குறித்து அருகில் உள்ள நகர காவல் நிலையத்திலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திலும் புகார் செய்திருக்கிறேன். ஆனால் முறையான விசாரணை நடக்கவில்லை. நான் சரியான வாடகை செலுத்தி இருந்ததற்கான அனைத்து ஆவணங்களும் என்னிடம் உள்ளது. தாங்கள் அந்தக் கடையை வாங்கி விட்டதாக சொல்கிறார்கள் ஆனால் அதற்கான எந்த ஆவணத்தையும் என்னிடம் காண்பிக்கவில்லை. காவல்துறைக்கு பணத்தை கொடுத்து இது குறித்து விசாரிக்க விடாமல் செய்து வைத்திருக்கிறார்கள். கடையில் உள்ளே மூன்றரை கிலோ தங்கமும் 50 கிலோ வெள்ளியும் சிலநட்ச ரூபாய் ரொக்கமும் இருக்கின்றன. அவையெல்லாம் என்ன ஆயிற்று என்று தெரியவில்லை. இப்போது என்னை கொலை செய்து விடுவதாகவும் மிரட்டுகிறார்கள். காவல்துறையும் நடவடிக்கை எடுக்க மறுக்கிறது. இதற்குப் பின்னணியில் எஸ் டி பி ஐ கட்சியினரும் இருக்கிறார்கள் என்று கூறினார்.






