• Thu. Apr 25th, 2024

குற்றால அருவிகளில் குளிக்க ஆயிரக்கணக்கான பக்தர்கள், சுற்றுலா பயணிகள் குவிந்தனர்

தென்காசி மாவட்டம் குற்றால அருவிகளில் குளிக்க அனுமதி. முதல் நாளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள், சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

தென்காசி மாவட்டத்திலுள்ள குற்றாலம் பேரருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவி உள்ளிட்ட அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு கொரோனா தொற்று காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் முதல் தடை விதிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை குற்றாலம் பேரருவி, பழைய குற்றால அருவி, ஐந்தருவி, புலியருவி, குண்டாறு அணை பகுதியில் உள்ள அருவிகள், மேக்கரை பகுதிகளில் உள்ள அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்தது.

குற்றால அருவிகளில் இன்று முதல் சுற்றுலா பயணிகள் காலை 6 மணி முதல் மாலை 6 மணி மட்டுமே அனுமதிக்கபடுவார்கள். மேலும் குற்றாலம் பேரருவியில் ஒரே நேரத்தில் 10 ஆண்கள் மற்றும் 6 பெண்கள் குளிக்கவும், ஐந்தருவியில் ஒரே நேரத்தில் 10 ஆண்கள் மற்றும் 10 பெண்கள் குளிக்கவும், பழைய குற்றால அருவியில் ஒரே நேரத்தில் 5 ஆண்கள் மற்றும் 10 பெண்கள் மட்டுமே சமூக இடைவெளியுடன் குளிக்க அனுமதி வழங்கப்பட்ட நிலையில் முதல் நாளில் ஆயிரக்கணக்கான அய்யப்ப பக்தர்கள், சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

உடல் வெப்ப அளவை கணக்கிடுவதற்கு சுகாதாரத்துறை மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் ஈடுபட்டிருந்தனர். காலை 6 மணிக்கு பேரருவி பகுதியில் பூஜை செய்து மலர் தூவி சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டது.

இந்நிலையில் ஐயப்ப பக்தர்கள் திடீரென விதிமுறைகளை மீறி குவியலாக கும்பலாக நூற்றுக்கணக்கானோர் அருவியை நோக்கி விரைந்து சென்று குளியலை தொடங்கினர். தொடர்ந்து போலீசார் மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதனை தொடர்ந்து காவல் துறையினர் தடுப்புகள் அமைத்து கூட்டத்தை ஒழுங்குபடுத்தினர்.

இந்நிலையில் குற்றாலத்தில் குளிக்க அனுமதி அளித்ததற்கு வணிகர்கள் நன்றி தெரிவித்துள்ளனர். மேலும் தற்போது அய்யப்ப பக்தர்கள் சீசன் காலம் என்பதால் மாலை 6 மணி வரை என்பதை இரவு வரை நீட்டிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *