• Thu. Apr 25th, 2024

திருநங்கையாக மாறிய மகனை அடித்து கொன்ற தாய்

சேலத்தில் திருநங்கை மர்மமாக இறந்த வழக்கில் , ஆணாகவே இருக்க ஹார்மோன் ஊசி போட வர மறுத்ததால் அடித்துக் கொன்றோம் என்று கைதான தாய் உள்ளிட்ட 6 பேர் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளனர்.

சேலம் ஜாகீர் அம்மாபாளையத்தை சேர்ந்தவர் உமாதேவி. கணவரை பிரிந்து தனது மகன் நவீன்குமாருடன் வசித்து வந்தார் . நவீன்குமார் சமீபத்தில் திருநங்கையாக மாறி தனது பெயரை அக்ஷிதா என மாற்றிக்கொண்டார் . பெங்களூர் சென்று திருநங்கைகளுடன் வாழ்ந்த அவர் , கடந்த தீபாவளி பண்டிகையன்று வீடு திரும்பியுள்ளார். இதனிடையே கடந்த வாரம் சக்தி என்ற இளைஞருடன் ஏற்காடு சென்று விட்டு , நள்ளிரவு ஒன்றரை மணியளவில் வீடு திரும்பியுள்ளார் . மறுநாள் காயத்துடன் , அம்மாபாளையம் காட்டுப்பகுதியில் நவீன்குமார் மயங்கிய நிலையில் கிடந்தார் . அவரை மீட்டு சேலம் அரசு மருத் துவமனையில் அனுமதித்தனர் . ஆனால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் .

இதுகுறித்து சூரமங்கலம் போலீசார் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர் . அதில் , தாய் உமாதேவி மீது சந்தேகம் கொண்டு அவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர் . மகன் திருநங்கையாக மாறியது பிடிக்காததால் , தாய் உமாதேவி தனக்குத் தெரிந்த நபர்கள் 5 பேரின் உதவியுடன் அவரை அடித்துக் கொன்றது விசாரணையில் உறுதியானது .

இதையடுத்து திருநங்கை மர்மச்சாவை கொலை வழக்காக மாற்றி , தாய் உமாதேவி , ஜாகீர்அம்மாபாளையம் மாரியம்மன்கோயில் தெருவை சேர்ந்த வெங்கடேஷ், காமராஜ் , பாரதிநகரை சேர்ந்த கார்த்திகேயன், சந்தோஷ், டால்மியாபோர்டு பகுதியை சேர்ந்த சிவக்குமார் ஆகிய 6 பேரை நேற்று கைது செய்தனர் .
அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் நவீன்குமார் திருநங்கையாக மாறியது , தாய் உமாதேவிக்கு பிடிக்கவில்லை . மற்ற திருநங்கைகளுடன் வந்து தனது வீட்டில் குடியேறிவிடுவாரோ என்ற அச்சமும் ஏற்பட்டுள்ளது . இதனால் , தெரிந்த நபர்களிடம் தனது மகன் ஆணாகவே இருக்க என்ன செய்யலாம் என ஐடியா கேட்டுள்ளார் .

அதற்கு சிலர் , திருநங்கையாக மாறும் நபர்கள் ஆணாகவே இருக்க விழுப்புரத்தில் ஹார்மோன் ஊசி போடுகிறார்கள் . அங்கு சென்று நவீன்குமாருக்கு ஹார்மோன் ஊசி போட்டால் , எல்லாம் சரியாகிவிடும் எனக் கூறியுள்ளனர் . அந்த தகவலை மகன் நவீன்குமாரிடம் தெரிவித்து ஹார்மோன் ஊசி போட்டுக்கொள்ள தாய் உமாதேவி அழைத்துள்ளார் . ஆனால் , நான் திருநங்கையாகவே வாழ விரும்புகிறேன் . என்னை எங்கும் அழைக்காதீர்கள் என கண்டிப்பாக கூறியுள்ளார் . இதனால் , தெரிந்த நபர்கள் மூலம் மகனின் கால்களை அடித்து ஒடித்துவிட்டு , அதற்கு சிகிச்சை அளிப்பது போல் விழுப்புரம் அழைத்துச் சென்று ஹார்மோன் ஊசி போட்டுவிடலாம் என தாய் திட்டமிட்டுள்ளார் .

அதன்படியே தெரிந்த நபர்களான வெங்கடேஷ் , காமராஜ் , கார்த்தி உள்ளிட்ட 5 பேரைக் கொண்டு நவீன்குமாரை அடித்து , அவரது காலை உடைக்க முற்பட்டுள்ளனர் . அப்போது , வாயை பொத்தியதில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கியுள்ளார். பின்னர் இறந்துவிட்டதாக கருதி , காட்டுப்பகுதியில் தூக்கிப் போட்டுவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *