• Thu. May 15th, 2025

அதிமுகவை நம்பியவர்கள் கெட்டதில்லை- செல்லூர் கே.ராஜு பேட்டி

Byகாயத்ரி

Jul 15, 2022

அதிமுகவை நம்பியவர்கள் கெட்டதில்லை, அதிமுகவை நம்பாமல் கெட்டவர்கள் தான் உள்ளனர், என மதுரையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜு பேட்டி.

அதிமுகவின் கழக அமைப்பு செயலாளராக பதவி பெற்ற முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜு மதுரை கே.கே நகரில் உள்ள எம்.ஜி.ஆர், ஜெயலலிதா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். பின்னர் அமைச்சர் செல்லூர் கே.ராஜு செய்தியாளர்களிடம் கூறுகையில் “அதிமுகவில் பதவி கேட்காமலேயே எடப்பாடி பழனிச்சாமி எனக்கு கழக அமைப்பு செயலாளராக பதவி வழங்கினார். அதிமுகவுக்கும், எடப்பாடி பழனிச்சாமிக்கும் நான் விசுவாசமாக செயல்படுவேன். நம்மை நம்பி இருக்கும் தொண்டர்களுக்கு விசுவாசமாக இருக்க வேண்டும் என ஜெயலலிதா கூறினார். எடப்பாடி பழனிச்சாமியை மீண்டும் முதல்வராக்க பாடுபடுவேன். அதிமுக தொண்டரின் புனித ஸ்தலமாக தலைமை அலுவலகம் விளங்குகிறது. அப்படிபட்ட இடத்தில் வன்முறை சம்பவம் நிகழ்ந்தது வருத்தமளிக்கிறது, எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக ஒன்றுபட்டு இருக்கிறது. அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்கள் மீண்டும் அதிமுகவில் இணைய வேண்டும், அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்கள் மனம் திருந்தி வந்தால் ஏற்றுக் கொள்ளவோம். ஒ.பி.எஸ் ஏட்டிக்கு போட்டியாக செயல்படுவதால் எந்தவொரு பயனும் இல்லை. யார் பக்கம் கட்சி இருக்கிறது என்பதை ஒ.பி.எஸ் புரிந்து கொள்ள வேண்டும், அதிமுகவில் சாதி ரீதியாக பதவி வழங்குவதில்லை, அதிமுகவில் சாதி இல்லை, ஒ.பன்னீர்செல்வம் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து பேசி ேவருத்தம் தெரிவிக்க வேண்டும். எடப்பாடி பழனிச்சாமி பின்னால் யார் வேண்டுமானாலும் வரலாம். அதிமுகவை நம்பியவர்கள் கெட்டதில்லை. அதிமுகவை நம்பாமல் கெட்டவர்கள் தான் உள்ளனர். ஒ.பி.ரவீந்திர நாத்தை நீக்கியதால் அதிமுகவுக்கு எந்தவொரு இழப்பும் இல்லை. நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை அடிப்படையில் கட்சியின் பலம் நிர்ணயம் செய்யப்படாது, தொண்டர்களின் பலமே அதிமுக” என கூறினார்.