மதுரை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் தை மாதத்தில் நடைபெறும் தெப்பத்திருவிழா கொடியேற்றத்துடன் இன்று விமர்சையாக தொடங்கியது.
முருகனின் ஆறுபடை வீடுகளில் முதல் வீடாக திகழ்ந்து வரும் மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் தெப்பத்திருவிழா வெகு விமர்சையாக தை மாதத்தில் கொண்டாடப்படுவது வழக்கம்.
அந்த வகையில் இந்த ஆண்டு தை தெப்பத்திருவிழா 01.02.2022 முதல் 10.02.2022 முடிய நடைபெறவுள்ளது. தெப்பத்திருவிழாவை முன்னிட்டு முதல் நாளான இன்று கொடியேற்றும் நிகழ்வு நடைபெற்றது.
முருகப்பெருமான் தெய்வானையுடன் படிச்சட்டத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திருவிழாக் காலங்களில் காலை, மாலையில் தினமும் மயில் ,சேஷ,படிச்சட்டம் ,தங்க குதிரை போன்ற வாகனத்தில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி தருவார்.
இதனையடுத்து திருப்பரங்குன்றம் கோயில் நிர்வாகம் சார்பில் கோயில் திருவிழா 10 நாட்களும் உள் திருவிழாவாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆகையால் கோயில் திருவாட்சி மண்டபத்தில் சுவாமி புறப்படும் நிகழ்ச்சி நடைபெறும் என கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.