

பசும்பொன்னில் தேவர் குருபூஜை விழா யாகசாலை பூஜையுடன் இன்று தொடங்கியது. இதனையடுத்து அங்கு பக்தர்கள் வேல் குத்தியும், பால்குடம் எடுத்தும் நேர்த்திக்கடன் செலுத்தி வருகிறார்கள்.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவரின் 114-வது ஜெயந்தி விழா மற்றும் 59-வது குருபூஜை விழா இன்று தொடங்கி, நாளை, மறுநாள் வரை 3 நாட்கள் நடைபெறுகிறது.
தேவர் குருபூஜை இன்று தொடங்குவதையொட்டி அதிகாலை 5 மணி அளவில் நினைவாலய பொறுப்பாளர் காந்தி மீனாள் நடராஜன் தலைமையில் தங்கவேல், சத்தியமூர்த்தி, பழனி ஆகியோர் முன்னிலையில் பிள்ளையார்பட்டி பிச்சை குருக்கள் தலைமையில் சிவாச்சாரியார்கள் யாகசாலை பூஜை நடத்தினார்கள்.
இதனை அடுத்து வேல் குத்தி பால்குடம் எடுத்து அங்கு பொதுமக்களும் பக்தர்களும் நேர்த்திக்கடன் செலுத்தி வருகிறார்கள்.
அதன்பின்னர் பொதுமக்கள் தேவர் நினைவிடம் முன்பு பொங்கல் வைத்து வழிபடுகிறார்கள். 28 ந்தேதியான இன்று ஆன்மீக விழாவும், நாளை தேவரின் அரசியல் விழா நடைபெறுகிறது. 30ஆம் தேதி குருபூஜை விழா நடக்க இருக்கிறது.
30ஆம் தேதி அனைத்து அரசியல் கட்சி தலைவர்கள், சமுதாய தலைவர்கள் அஞ்சலி செலுத்த வருகிறார்கள். இதையொட்டி பாதுகாப்பு முன் ஏற்பாடுகளை ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் சங்கர்லால் குமாவத் மற்றும் மாவட்ட எஸ்.பி. கார்த்திக் உள்ளிட்ட அதிகாரிகள் செய்துள்ளனர்.
