• Wed. Apr 24th, 2024

பதட்டத்தில் தேனி மாவட்டம்.., அம்பேத்காரை தூக்கி எறிந்த பேரூராட்சி தலைவர்கள், அலுவலர்கள்!

Byகாயத்ரி

May 9, 2022

இந்திய குடியரசு தொழிலாளர் தொழிற்சங்கம் சார்பாக “தமிழ்நாடு பேரூராட்சி பணியாளர்கள் நலச்சங்கம்” பெயர் பலகை மற்றும் கொடிகம்பம் நடும் விழாவை தடுத்து நிறுத்திய குச்சனூர் பேரூராட்சி மன்றத் தலைவர் ரவிச்சந்திரன், மறைந்த தேசத்தலைவர் அம்பேத்கரை இழிவு படுத்தும் வகையில் பேசிய நிகழ்வு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த மே 1 அன்று தேனி மாவட்டத்தில் கெங்குவார்பட்டி, தேவதானப்பட்டி, வடுகப்பட்டி, தாமரைக்குளம், தென்கரை, ஆண்டிபட்டி, பழனிச்செட்டிபட்டி, வீரபாண்டி, பூதிப்புரம், மீனாட்சிபுரம், மேலச்சொக்கநாதபுரம், குச்சனூர், மார்க்கையன்கோட்டை, தேவாரம், பண்ணைபுரம், கோம்பை, உத்தமபாளையம், அனுமந்தன்பட்டி, கம்பம்புதுபட்டி, ஓடைப்பட்டி, காமயக்கவுண்டன்பட்டி, ஹைவேஸ் ஆகிய பேரூராட்சிகளில் இந்திய குடியரசு தொழிலாளர் தொழிற்சங்கம் சார்பாக “தமிழ்நாடு பேரூராட்சி பணியாளர்கள் நலச்சங்கம்” பெயர் பலகை மற்றும் கொடிகம்பம் நடுவதற்கு இச்சங்கம் சார்பாக முடிவெடுக்கப்பட்டு கடந்த ஏப்ரல் 28 அன்று தேனி மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் மற்றும் தேனி மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் ஆகியோருக்கு முறைப்படி அனுமதி கடிதம் கொடுக்கப்பட்டு, அதனடிப்படையில் தேனி மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் பொறுப்பிலுள்ள பொறியாளர் ராஜாராம் அனைத்து பேரூராட்சிகளின் செயல் அலுவலருக்கு இ-மெயில் மூலம் தகவல் தெரிவித்துள்ளார்.

அதை தொடர்ந்து மே 1 அன்று காலை 11.00 மணியாளவில் இந்திய குடியரசு தொழிலாளர் தொழிற்சங்கத் தலைவர் இரா.அன்புவேந்தன் தலைமையில் குச்சனூரில் தொழிற்சங்கம் பெயர் பலகை மற்றும் கொடியினை பேரூராட்சி அலுவலக கட்டிடம் முன்பு ஏத்துவதற்கு சென்றுள்ளனர். அப்போது அங்கு வந்த குச்சனூர் பேரூராட்சி மன்றத் தலைவர் ரவிச்சந்திரன் “நான் தான் மன்றத் தலைவர், அம்பேத்கர் படம் போட்டு பலகை வைத்தால் நாளைக்கு சாதிக் கலவரம் வந்துவிடும். சாதி சங்கத் தலைவர் அம்பேத்கர் படம் போட்ட பெயர் பலகையை இங்கே வைக்க நான் அனுமதி தரமாட்டேன்” என்று மறைந்த தேசத்தலைவர் அம்பேத்கரை இழிவுபடுத்தும் விதமாக பேசி மிரட்டியுள்ளார். அதுமட்டுமல்லமால், அம்பேத்கர் படம் அச்சிடப்பட்ட இந்திய குடியரசு தொழிலாளர் நல சங்கம் பெயர் பலகை மற்றும் கொடிகம்பத்தினை நடுவதற்கும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்.

இந்நிலையில் இதேபோல் கடந்த மே 2 அன்று பூதிப்புரம், கெங்குவார்பட்டி, தாமரைக்குளம், தேவதானப்பட்டி ஆகிய பேரூராட்சிகளின் கட்டிடம் முன்பு இச்சங்கம் நட்டு வந்த தொழிற்ச்சங்க பெயர் பலகை மற்றும் கொடிக்கம்பத்தினை பிடுங்கி எறிந்துள்ளனர்.

மேலும் ஓடைப்பட்டி, கம்பம்புதுபட்டி, அனுமந்தன்பட்டி, கோம்பை, பண்ணைப்புரம், மேலசொக்கநாதபுரம், மார்கையன்கோட்டை ஆகிய பேரூராட்சிகளில் தொழிலாளர் நலச்சங்க பெயர் பலகை மற்றும் கொடிகம்பத்தினை நடுவதற்கு அனுமதி மறுத்துள்ளனர். இந்த செயல் இந்திய அரசியல் சாசனத்தை மீறும் செயலாக அச்சங்கத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

இச்செயலால் வருத்தமடைந்த இந்திய குடியரசு தொழிலாளர் தொழிற்சங்கம் பணியாளர்கள் மறைந்த தேசத் தலைவரை இழிவுபடுத்தும் விதமாக நடந்துகொண்ட தேனி மாவட்டம், உத்தமபாளையம் தாலுக்கா – குச்சனூர் பேரூராட்சி மன்றத் தலைவர ரவிச்சந்திரன், போடி தாலுக்கா – மேலச்சொக்கநாதபுரம் பேரூராட்சி மன்றத் தலைவர் கண்ணன், பூதிப்புரம் பேரூராட்சி மன்றத் தலைவர் கவியரசு, பெரியகுளம் தாலுக்கா – தேவதானப்பட்டி பேரூராட்சி மன்றத் முன்னால் தலைவர் குணசேகரன் மற்றும் அவரது மகன் நிமந்தன் கெங்குவார்பட்டி பேரூராட்சி மன்றத் துணைத்தலைவர், ஞானமணியின் மகன் ஸ்டிபன், தாமரைக்குளம் பேரூராட்சி மற்றத் துணைத் தலைவரின் கணவர் பொன்சேது ஆகியோர்மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம் 2015 பிரிவுகள் கீழ் உடனடியாக கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் எங்களது தொழிற்சங்கம் பெயர் பலகை மற்றும் கொடியினை மேற்கண்ட அதே பேரூராட்சி மட்டுமல்லாமல் மேலும் 16 பேரூராட்சிகளிலும் அவர்களது தொழிற்ச்சங்கம் பெயர் பலகை மற்றும் கொடியினை நடுவதற்கு உரிய பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தேனி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.

இந்த குற்றச்சாட்டுகள் குறித்து அரசியல் டுடே சார்பில் குச்சனூர் பேரூராட்சி தலைவர் ரவிச்சந்திரனை தொடர்புகொண்டோம், அவர் சரியான முறையில் பதிலும் அளிக்கவில்லை. இதைத்தொடர்ந்து தேனி மாவட்ட பேரூராட்சிகளில் உதவி இயக்குனர் பொறுப்பில் உள்ள பொறியாளர் ராஜாராமை தொடர்பு கொண்டு பேசினோம். அதற்கு ராஜாராம் நான் அது பற்றி தற்போது விளக்கமாக பேச விரும்பவில்லை, நான் முக்கியமான வேலையாக இருக்கின்றேன் என்று நமது தொடர்பை துண்டித்தார்.

பி. டி ரவிச்சந்திரன் குச்சனூர் பேரூராட்சி மன்ற தலைவர்
ராஜாராம் பொறியாளர்

இன்னும் எத்தனை காலத்திற்கு இந்த சாதி ரீதியான துன்புறுத்தல்களை சந்திக்க நேரிடுமோ தெரியவில்லை. இதற்கான முற்றுப்புள்ளி இல்லாமல் எல்லா இடத்திலும் சாதி சாதி என்று ஒளித்துக்கொண்டே தான் இருக்கிறது. அடுத்தடுத்த நிகழ்வுகள் நடக்க, முன் நடந்த நிகழ்வுகள் நினைவில் இல்லாமல் போய்விடும்… அதுபோல் இத்தகைய நிகழ்வு மறைந்திட கூடாது என்பதே பலரின் நோக்கம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *