

திமுக அரசு தமிழக சட்டப் பேரவையை மகாபலிபுரத்துக்கு மாற்றுவதற்கான வேலைகளை தொடங்கி உள்ளதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
பழநியில் நேற்று தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் தரிசனம் செய்த அவர் பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் சாலையோர வியாபாரிகள், சிறு வியாபாரிகளை பாதிக்கும் வகையில் அமையும் லூலூ மார்க்கெட் நிறுவனத்தை வரவிடமாட்டோம். லூலு மால் தொடர்பாக ஒரு செங்கல்கூட வைக்க பாஜக அனுமதிக்காது. அதிமுக ஆட்சியில் வால்மார்ட் நிறுவனம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போராடிய கட்சிகள் தற்போது லூலூ நிறுவன விஷயத்தில் அமைதியாக உள்ளன.
தமிழக ஆளுநர் அவர் உளவுத்துறையில் 35 ஆண்டுகள் பணியில் இருந்த அனுபவம் உள்ளவர்.
அவர் கூறும் கருத்து தவறாக இருக்காது. குறிப்பாக கேரளாவில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் செயல்பாடுகளைப் பார்த்த யாரும் ஆளுநரின் கருத்தை மறுக்க மாட்டார்கள்.
தமிழகத்தின் புதிய சட்டசபையை மகாபலிபுரத்திற்கு மாற்ற திமு.க அரசு முயற்சி செய்துவருகிறது.தமிழக சட்டப்பேரவையை மகாபலிபுரத்துக்கு மாற்றுவதற்காக அங்கு 6 ஆயிரம் ஏக்கர் நிலத்தை வாங்கி, அதற்கான பணிகளை ஆரம்பித்து இருக்கிறார்கள்.
மேலும், அங்கே அலுவலகம் திறப்பதற்காக திமுக இடம் வாங்கியுள்ளது. 6 அமைச்சர்களின் பினாமி பெயரில் மகாபலிபுரம் பகுதியில் நூறு ஏக்கர் நிலம் வாங்கியுள்ளனர்.இவ்வாறு அண்ணாமலை கூறினார்.