பிரிட்டனில், உலகின் முதல் கரோனா மாத்திரையை மருத்துவர்கள் கண்டுபிடித்துள்ளனர். இதற்கு, பிரிட்டன் அரசு அனுமதியளித்துள்ளது.
உலகளவில் 24.8 கோடிக்கும் அதிகமானோர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 50.2 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் உலக நாடுகள் பலவும் தடுப்பூசி செலுத்துவதை வேகப்படுத்தி வருகின்றன.
இந்நிலையில், பிரிட்டன் நாட்டில் கரோனாவுக்கு எதிரான மால்னுபிராவிர் என பெரிடப்பட்டுள்ள ஆன்ட்டி வைரல் மாத்திரைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. உலகிலேயே கரோனாவுக்கு எதிரான மாத்திரைக்கு அனுமதியளித்த முதல் நாடு என்ற அந்தஸ்தைப் பிரிட்டன் பெற்றுள்ளது.
இந்த மாத்திரைக்கு பிரிட்டனின், மருந்துகள் மற்றும் சுகாதாரப் பொருட்களுக்கான ஒழுங்குமுறை ஆணையம் (The Medicines and Healthcare products Regulatory Agency MHRA) அவசர கால பயன்பாட்டிற்கான அனுமதியை வழங்கியுள்ளது. இந்த மாத்திரை பிரிட்டனில் லேஜ்விரோ (Lagevrio ) என்ற பிராண்ட் பெயரில் விற்பனை செய்யப்படவுள்ளது. இந்த மாத்திரையை அமெரிக்காவின் மெர்க் மற்றும் ரிட்ஜ்பேக் பயோதெரபியூடிக்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன.
கோவிட் 19 தொற்றுக்கான பரிசோதனையை மேற்கொண்ட பின்னர் இந்த மாத்திரையை அறிகுறி தொடங்கிய 5 நாட்களுக்கு உட்கொள்ள வேண்டும். ஒரு நாளைக்கு இருமுறை இந்த மாத்திரையை உண்ண வேண்டும். இந்த மாத்திரையை உட்கொண்டால் கரோனாவால் ஏற்படும் உயிரிழப்பும், மருத்துவமனையின் அனுமதிக்கப்படும் அளவும் உடல் நிலை மோசமாவதும் 50% வரை குறைவதாக ஆய்வறிக்கை தெரிவிக்கின்றது.