பஞ்சாப் மாநிலத்தில் முதல்வர் அமரிந்தர் சிங்குக்கும், நவ்ஜோத்சிங் சித்துவுக்கும் இடையே நீண்டகாலமாக மோதல் போக்கு நிலவி வந்தது. அடுத்தடுத்து நடந்த மோதல்கள் காரணமாக செப்டம்பர் 18ஆம் தேதி தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் அமரிந்தர் சிங்.
இதைத் தொடர்ந்தது சித்துவின் ஆதரவாளரான சரண்ஜித் சிங் சன்னி பஞ்சாப் முதல்வராக பதவி ஏற்றுக்கொண்டார். ஒரு வாரத்திற்குப் பிறகு, அமரிந்தர் சிங் திடீர் பயணமாக டெல்லி சென்று, பா.ஜ.க. தலைவர்களை சந்தித்தார். ஆனால் பா.ஜ.க.வில் இணைய வாய்ப்பு இல்லை எனத் தெரிவித்தார்.
இந்த நிலையில் அமரிந்தர் சிங்கின் ஊடக ஆலோசகர் ரவீன் துக்ரல், அமரிந்தர் விரைவில் புதிய கட்சி தொடங்க இருப்பதாக டுவிட்டரில் அறிவித்துள்ளார். அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், “பஞ்சாப் எதிர்காலத்துக்காக போராட்டம் தொடருகிறது. மிக விரைவாகவே பஞ்சாப் மாநில மற்றும் மக்களின் நலன், கடந்த ஓராண்டாக போராடி வரும் விவசாயிகளின் நலன்களை காக்கும் வகையில் புதிய கட்சி தொடங்குவது குறித்து அறிவிப்பேன்.
விவசாயிகளில் நலனை காக்கும் வகையில் விவசாயிகள் போராட்டத்துக்கு தீர்வு காணப்பட்டால் 2022 பஞ்சாப் சட்டமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைப்பேன். பிரிந்த அகாலி குழுக்கள், குறிப்பாக திண்ட்சா மற்றும் பிரம்புரா பிரிவுகள் போன்ற ஒத்த எண்ணம் கொண்ட கட்சிகளுடன் கூட்டணியை எதிர்பார்க்கிறேன்” என குறிப்பிட்டு உள்ளார்.