மதுரை அவனியாபுரம் முருகவேல் நகர் லட்சுமணன் 50. மனைவியை பிரிந்து வாழ்கிறார். கூலித்தொழிலாளியான இவர், அவனியாபுரத்தில் உள்ள சகோதரி வீட்டில் தங்கி வேலைக்கு சென்று வந்தார். நேற்றுமுன்தினம் இரவு வேலை முடிந்து வீடு திரும்பினார்.

வெள்ளக்கல் பகுதியில் நடந்து வந்தபோது அவரிடம் அப்பகுதி மக்கள் விசாரித்தனர். லட்சுமணன் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் அவர் திருடனாக இருக்குமோ என சந்தேகப்பட்டு ஒரு பெண் உட்பட 4 பேர் கடுமையாக தாக்கி எச்சரித்து அனுப்பினர்.
காயம்பட்ட நிலையில் வீடு திரும்பினார். தகவல் அறிந்து வீட்டிற்கு வந்து விசாரித்த உறவினர்கள் லட்சுமணனை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

தீவிர சிகிச்சையில் இருந்த லட்சுமணன் இன்று அதிகாலை அதாவது வெள்ளிக்கிழமை இறந்தார். அவனியாபுரம் போலீசார் விசாரிக்கின்றனர். ‘மனநலம் பாதிக்கப்பட்ட லட்சுமணனை அடித்துக்கொன்றவர்களை கைது செய்ய வேண்டும்’ என உறவினர்கள் வலியுறுத்தினர்.




