சோழவந்தான் அருகே கடந்த 15 நாட்களாக குடிநீர் வராததைக் கண்டித்து இன்று நடைபெற இருந்த மறியல் போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ளது தேனூர் ஊராட்சி இங்கு 12 வார்டுகள் உள்ளன. ஊராட்சி மன்ற தலைவராக பாலு என்பவர் செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் மதுரை மாவட்ட குடிநீர் தேவைக்காக சோழவந்தான் மதுரை மெயின் ரோட்டில் தேனூர் பகுதியில் குழாய் பதிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக கடந்த 15 நாட்களாக தேனூர் பகுதியில் பேருந்து எதுவும் வரவில்லை, வீடுகளில் குடிநீர் 15 நாட்களாக வரவில்லை அதனையும் ஊராட்சி நிர்வாகம் சரி செய்யவில்லை என தெரிகிறது.
இதனைக் கண்டித்து தேனூர் கிராம பொதுமக்கள் இன்று சாலை மறியலில் ஈடுபட போவதாக வாட்ஸப் மூலம் தகவல் தெரிவித்தனர். இது குறித்து மறியலில் ஈடுபட முயன்றவர்களுடன் சமரச பேச்சுவார்த்தை நடத்திய சமயநல்லூர் காவல் அதிகாரிகள் ஊராட்சி மன்ற நிர்வாகத்துடன் பேசி விரைவில் சரி செய்ய இருப்பதாக கூறினர். பேச்சுவார்த்தையை ஏற்று கொண்ட தேனூர் கிராமத்தினர் காவல்நிலைத்தில் மனு ஒன்றை அளித்து குடிநீர் மற்றும் பேருந்து வசதி விரைவில் சரி செய்யப்படவில்லை என்றால் மீண்டும் பொதுமக்களை கலந்து ஆலோசித்து தேதி அறிவித்து காவல்துறை அனுமதியுடன் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடைபெறும் என்றனர்.