

தமிழக அரசின் கடனை அடைக்க சவுதியிலிருந்து பணம் அனுப்பிய தமிழர். திருச்சி மாவட்டம் துறையூர் கொப்பம்பட்டி கிழக்கு காலனியைச் சேர்ந்தவர் சின்னராஜா செல்லதுரை. இவர் சவுதி அரேபியா ஜிந்தாவில் வசிக்கிறார். அங்கு அவர் என்ஜினீயராக பணியாற்றுகிறார். அவர் முதல்-அமைச்சர் தனிப்பிரிவுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில்:- நான் தற்போது சவுதி அரேபியாவில் என்ஜினீயராக பணிபுரிகிறேன். 2022-2023-ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் அறிக்கையை கடந்த மார்ச் மாதம் செய்தி மூலம் அறிந்தேன். அடுத்த ஆண்டு (2023) மார்ச் 31-ந் தேதி நிலவரப்படி தமிழக அரசின் கடன் ரூ.6 லட்சத்து 53 ஆயிரத்து 348.73 கோடியாக இருக்கும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தமிழகத்தின் மொத்த மக்கள் தொகை 7 கோடியே 21 லட்சத்து 47 ஆயிரத்து 30 ஆகும்.
இதன்படி கணக்கிட்டால், ஒவ்வொரு தமிழன் மீதும் உள்ள தமிழக அரசின் கடன் ரூ.90 ஆயிரத்து 558 ஆக உள்ளது. இதை அறிந்து நான் அதிக வருத்தம் அடைந்தேன். எனவே தமிழக அரசின் கடனை அடைக்கும் வகையில் எனது பங்களிப்பைச் செலுத்த வேண்டும் என்று முடிவு செய்தேன். எனது இந்த செயல்பாட்டினால் தூண்டப்படும் ஒவ்வொருவரும் அவர்களின் பங்களிப்பை அரசுக்கு அளித்தால் தமிழக அரசுக்கு இருக்கும் கடன் நெருக்கடி குறையும் என்று கூறினார்.
